ஈரான் அதிபர் தேர்தலில் அகமதிநிஜாத் பெரும் வெற்றி - 'பிராடு' தேர்தல் என போட்டியாளர் பேட்டி!
ஈரான் அதிபர் தேர்தல் விதிப்படி மொத்தம் பதிவான வாக்குகளில் 50 சதவீதத்தைப் பெறுபவர்தான் அதிபராக முடியும். இல்லாவிட்டால் மறுபடியும் தேர்தல் நடத்தப்படும்.
ஆனால் அகமதிநிஜாத் 60 சதவீதத்திற்கும் மேலான வாக்குகளைப் பெற்றுள்ளாக தகவல்கள் கூறுகின்றன. இதையடுத்து அவரது ஆதரவாளர்கள் நாடு முழுவதும் பெரும் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
ஆனால் இதை போட்டியாளரான மீர் உசேன் மெளசவி மறுத்துள்ளார். தேர்தலில் நான்தான் வெற்றி பெற்றுள்ளேன். ஆனால் கடைசி நேரத்தில் மோசடி நடந்துள்ளது. இதை எதிர்த்து நான் வழக்கு தொடருவேன் என்று அவர் கூறியுள்ளார்.
ஈரான் அதிபர் தேர்தல் முடிவை உலக நாடுகள் ஆவலுடன் எதிர்பார்த்து வந்தன. மெளசவி வெற்றி பெறக் கூடும் என சில செய்திகள் கூறி வந்தன. ஆனால் அகமதிநிஜாத் அபார வெற்றி பெற்றுள்ளார்.
தேர்தல் மோசடி குறித்து மெளசவி கூறுகையில், பல வாக்காளர்கள் வாக்களிக்கவே அனுமதிக்கப்படவில்லை.
மேலும், நான் எஸ்.எம்.எஸ். மூலம் செய்த பிரசாரத்தையும் தேர்தல் அதிகாரிகள் முறைகேடாக தடுத்தனர்.
இந்தத் தேர்தலில் நான்தான் வெற்றி பெற்றுள்ளேன். வாக்கு எண்ணிக்கையில் மோசடி நடந்துள்ளது என்று கூறியுள்ளார்.
இருப்பினும் அதிபர் தேர்தலில் பதிவான மொத்த வாக்குகளில் அகமதிநிஜாத் 64.8 சதவீத வாக்குகள் பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
மெளசவிக்கு 32 சதவீத வாக்குளே கிடைத்துள்ளதாகவும் தேர்தல் ஆணையம் கூறுகிறது.
இன்று தேர்தல் முடிவை முறைப்படி தேர்தல் ஆணையம் அறிவிக்கவுள்ளது.
அமெரிக்க ஈரான் கவுன்சில் ஏமாற்றம்..
தேர்தல் முடிவு அதிருப்தி அளிப்பதாக வாஷிங்டனைச் சேர்ந்த தேசிய ஈரானிய அமெரிக்க கவுன்சில் தலைவர் திரிதா பார்சி தெரிவித்துள்ளார்.
இவ்வளவு பெரிய வெற்றியை அகமதி நிஜாத் பெற்றிருப்பது பெரும் ஏமாற்றத்தை அளிக்கிறது. எந்தவித மோசடியும் நடந்திருப்பதாக நாங்கள் நினைக்கவில்லை என்றார் அவர்.
அகமதிநிஜாத்தின் பரம வைரியான அமெரிக்கா, தேர்தல் வெற்றி குறித்து அதிகாரப்பூர்வமாக இதுவரை எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.