ஆஸியில் மேலும் ஒரு இந்தியருக்கு அடி - போன், பணம் திருட்டு
குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஹர்திக் பிபின்பாய் படேல். 24 வயதாகும் படேல், மெல்போர்ன் பல்கலைக்கழகத்தில் சமையல் கலை படிப்பு படித்து வருகிறார்.
நேற்று தனது காரில் அவர் ஏறப் போன சமயத்தில் ஒரு கும்பல் அங்கு வந்தது. ஹர்திக்கைத் தாக்கிய அவர்கள் அவர் வைத்திருந்த செல்போன், கார் சாவி, பர்ஸ், பணம் உள்ளிட்டவற்றைப் பறித்துக் கொண்டு போய் விட்டது.
தாக்குதலில் காயமடைந்த ஹர்திக் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். இன்று அவர் விடுவிக்கப்பட்டார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், நான் எனது காரி்ல ஏறப் போன சமயம், 3 பேர் அங்கு வந்தனர். 2 பேர் எனக்கு குறுக்கே நின்று கொண்டு முகத்தில் தாக்கினர்.
போதைக்கு அடிமையான கும்பலைப் போல அவர்களைப் பார்த்தால் தெரிந்தது. வெறுமனே அடித்து விட்டு என்னிடமிருந்த சில பொருட்களை பறித்துக் கொண்டு அவர்கள் போய் விட்டனர்.
என்னை அவர்கள் பலமாக தாக்கியபோது நான் மயக்கத்தில் கீழே விழுந்தேன். அப்போது அவர்கள், இந்தியனே நாட்டை விட்டு வெளியேறி விடு என்று கோபமாக கத்தியதைக் கேட்டேன்.
இப்போதெல்லாம் மெல்போர்ன் நகரில் பகலில் கூட சுதந்திரமாக நடமாட முடியவில்லை. விரைவில் நான் நாடு திரும்பி விட வேண்டும் என நினைக்கிறேன் என்றார் ஹர்திக்.
இந்தியர்கள் மீதான 12வது இனவெறித் தாக்குதல் இது என்பது குறிப்பிடத்தக்கது.