காதலித்து மணந்த பெண் மர்ம மரணம் - கணவர் குடும்பத்தார் மீது புகார்
சென்னை: சென்னையில் காதல் திருமணம் செய்த பெண் மர்மமான முறையில் மரணமடைந்தார். கணவர் குடும்பத்தார் மீது சந்தேகம் இருப்பதாக அப்பெண்ணின் தந்தை போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.
சென்னை மகாலிங்கபுரம் லட்சுமணன் தெருவை சேர்ந்தவர் நாராயணசாமி. வடக்கு உஸ்மான் சாலையில் ஆட்டோமொபைல்ஸ் கடை வைத்துள்ளார். அவருடைய மகள் கீதா ஆர்த்தி (27). எம்.பி.ஏ. பட்டதாரி ஆவார்.
இவருக்கும் விருகம்பாக்கத்தைச் சேர்ந்த ஸ்டீபன் என்ற சரத்குமாருக்கும் கல்லூரியில் படிக்கும் போது காதல் ஏற்பட்டது.
இதையடுத்து இருவீட்டாரின் சம்மதத்துடன் 2007-ம் ஆண்டு நவம்பர் மாதம் இருவருக்கும் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகு அவர்கள் கூட்டுக் குடும்பமாக வசித்து வந்தனர்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் கீதா ஆர்த்தி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கணவர் வீட்டார் அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே கீதா ஆர்த்தியின் பெற்றோர் பதறி அடித்தபடி அங்கு சென்றனர். இறந்து கிடந்த கீதா ஆர்த்தியின் உடலைப் பார்த்து கதறி அழுதனர்.
பின்னர் தனது மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி நாராயணசாமி போலீஸில் புகார் கொடுத்தார்.
அதில், எனக்கு 2 பெண்கள் உள்ளனர். அதில் மூத்த பெண்தான் கீதா ஆர்த்தி. எம்.பி.ஏ. படிக்கும் போதே உடன் படித்த சரத்குமார் என்பவரை காதலித்தாள். அவர்களுடைய காதலை ஏற்றுக் கொண்டு, நானும் திருமணத்திற்கு சம்மதித்தேன். சரத்குமாரின் தந்தை சி.பி.ஜெயின், தாயார் சாவித்திரி ஆகியோரிடம் திருமணம் பற்றி பேசினேன்.
அப்போது 75 பவுன் நகை, ரூ.5 லட்ச ரூபாய் வரதட்சணையாக கேட்டார்கள். அதற்கு நான், அவ்வளவு தர முடியாது என்று 2 லட்ச ரூபாய், 75 பவுன் நகை கொடுப்பதாக கூறினேன். அதைத் தொடர்ந்து சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் திருமணம் விமரிசையாக நடைபெற்றது.
ஆரம்பத்தில் பிரச்சினை இல்லை. ஆனால் போகப் போக பல்வேறு பிரச்சினைகள் தொடங்கின. கார் வாங்க வேண்டும் என்று கூறி, வரதட்சணையில் மீதி பணம் ரூ.3 லட்சத்தை வாங்கி வா என்று கொடுமைப்படுத்தினார்கள். நானும் ரூ.1 லட்சம் பணத்தை ஏற்பாடு செய்து கொடுத்தேன்.
அதைத் தொடர்ந்து அதை வாங்கி வா, இதை வாங்கி வா என்று தொந்தரவு செய்தார்கள். சைதாப்பேட்டையில் இருந்த எனக்கு சொந்தமான பிளாட் ஒன்றை அவருடைய பெயருக்கு மாற்றித் தருமாறு சரத்குமார் அடிக்கடி எனது மகளிடம் வற்புறுத்தி உள்ளார்.
எனது மகள் இதையெல்லாம் போனில் கூறி அழுவாள். அவளுக்கு ஆறுதல் கூறுவேன்.
கேட்ட வரதட்சணை கிடைக்காததால், எனது மகளை மோசமாக நடத்த ஆரம்பித்தனர். நானும் என்ன செய்வதென்று தெரியாமல் ரூ. 1 லட்சம் ஏற்பாடு செய்து தந்தேன். அப்படியும் கொடுமை நிற்கவில்லை.
இந்த நிலையில், ஆர்த்தியின் கணவரின் தம்பியான சந்தோஷ், எனது மகளிடம் ஆபாசமாக பேசி, தவறாக நடக்கவும் முயன்றுள்ளான். அடிமை போல எனது மகளை நடத்தி வந்தனர்.
மகளின் வாழ்க்கை பாழாகி விடக்கூடாதே என்று நானும் பொறுத்துக் கொண்டேன். இந்த நிலையில்தான் எனது மகள் தற்கொலை செய்து கொண்டு விட்டதாக தகவல் வந்தது.
என்னுடைய மகள் தூக்குப்போட்டு இறந்து விட்டதாக தெரிவித்தனர். நானும் என் குடும்பத்தினரும் பதறிப்போய் அங்கு சென்று பார்த்தோம். அங்கு கழுத்து அறுபட்ட காயத்துடன் எனது மகளை சோபாவில் படுக்க வைத்திருந்தனர். ஏன் இப்படி ஆனது? என்று கேட்டதற்கு, எதுவும் தெரியாது என்று பொறுப்பில்லாமல் தெரிவித்தார்கள்.
என்னுடைய மகளின் சாவில் சந்தேகம் உள்ளது. எனவே தகுந்த விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன் என்று நாராயணசாமி கூறியுள்ளார்.
இதை வழக்காகப் பதிவு செய்துள்ள போலீஸார் சரத்குமார் குடும்பத்தாரை விசாரித்து வருகின்றனர். வருவாய் கோட்டாட்சியர் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications