ஜூலை 6-மத்திய பட்ஜெட்: 3ல் ரயில்வே பட்ஜெட்
டெல்லி: 2009-10ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் ஜூலை 6ம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது. ரயில்வே பட்ஜெட் 3ம் தேதி தாக்கலாகிறது.
பட்ஜெட் கூட்டத் தொடர் ஜூலை மாதம் 2ம் தேதி முதல் ஆகஸ்டு 7ம் தேதி வரை நடக்கிறது.
இன்று பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டன.
ஜூலை 3ம் தேதி ரயில்வே பட்ஜெட்டை அமைச்சர் மம்தா பானர்ஜி தாக்கல் செய்த பின் சனி, ஞாயிறான 4,5ம் தேதிகள் நாடாளுமன்றத்துக்கு விடுமுறையாகும்.
6ம் தேதி நாடாளுமன்றம் மீண்டும் கூடியதும் மத்திய பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தாக்கல் செய்வார்.
2ம் தேதி கூட்டத் தொடர் தொடங்கியதும் மறைந்த உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்தப்படும். பின்னர் பொருளாதார ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்படும். அதிலேயே பொது பட்ஜெட் எப்படி இருக்கும் என்பது ஓரளவுக்குத் தெரிந்துவிடும்.
வழக்கமாக பிப்ரவரி மாதத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். இந்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடந்ததால், கடந்த பிப்ரவரி மாதம் 16ம் தேதி இடைக்கால பட்ஜெட்டைத் தான் பிரணாப் முகர்ஜி தாக்கல் செய்தார்.
அதில், ஜூலை 31ம் தேதி வரையிலான செலவீனங்களுக்காக நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெறப்பட்டிருந்தது.












Click it and Unblock the Notifications