ராகுல் பிறந்தநாளில் போராட்டம்-மாயாவதி
லக்னோ: ராகுல் காந்தியின் பிறந்தநாளில் தலித் மக்களுக்கு சமுதாய விருந்து படைத்து ஓட்டுக்களை கவர முயற்சித்து வரும் காங்கிரசின் திட்டத்தை முறியடிக்க வேண்டும். அவர்களின் நாடகத்தை மக்கள் அறிய செய்ய வேண்டும் என உத்தரப் பிரதேச முதல்வர் மாயாவதி கூறியுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியை எழுச்சி பெற செய்து, வரும் 2012ல் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற உத்வேகத்தில் அக்கட்சி செயல்பட்டு வருகிறது. மேலும், மாயாவதி வசமிருக்கும் தலித் ஓட்டு வங்கியை தன்பக்கம் கவர முழுவீச்சில் இறங்கியுள்ளது.
வரும் 19ம் தேதி நடக்கவிருக்கும் ராகுல் காந்தியின் 39வது பிறந்தநாளை நல்லிணக்க தினமாக காங்கிரஸ் அறிவித்துள்ளது. அன்று தலித்களுக்கு சமுதாய விருந்து கொடுத்து, தலித்களின் காவலனாக காங்கிரஸ் விளங்கும் என்பதை மக்கள் மத்தியில் அறிவிக்கும் முயற்சிகளில் வேகம் காட்டி வருகிறது.
காங்கிரசின் இத்திட்டத்தை முறியடிப்பது குறித்து விவாதிக்க பகுஜன் சமாஜ் கட்சியின் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் மற்றும் நிர்வாகிகளின் கூட்டத்துக்கு ஏற்பாடு மாயாவதி செய்தார்.
அதில் மாயாவதி பேசியது குறித்து பெயர் வெளியிட விரும்பாத பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஒருவர் கூறுகையில்,
ராகுல் மற்றும் காங்கிரசார் தலித் மக்களை ஏமாற்ற பார்க்கிறார்கள். ராகுல் காந்தி, தலித் மக்களின் வீட்டில் ஒரு நாள் இரவு தங்குவது, அவர்கள் வீட்டில் சாப்பிடுவது போன்றவை எல்லாம் நாடகம் தான். இது குறித்து பகுஜன் சமாஜ் கட்சியினர் மக்களிடம் பிரச்சாரம் செய்ய வேண்டும்.
இது போன்ற ஏமாற்று வேலைகளில் மகாத்மா காந்தி உட்பட அனைத்து காங்கிரசார்கள் ஈடுபட்டு வந்துள்ளனர். தலித்களுக்காக உழைப்பது போல் சொல்லிவிட்டு பூனா ஒப்பந்ததத்தில் தலித் மக்களுக்கு கிடைக்கவிருந்த பல சலுகைகளை தட்டி பறித்தவர் தான் மகாத்மா காந்தி.
ராகுல் பிறந்த தினமான வரும் 19ம் தேதி உத்தரப் பிரதேசத்தில் உள்ள அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மற்றும் அனைத்து மாநில தலைநகரங்களிலும் போராட்டம் நடத்தப்படும்.
அம்பேத்கார், கன்சிராம் ஆகிய இருவரும் தான் உண்மையான தலித் தலைவர்கள். இவர்கள் தான் தலித் மக்களுக்காக போராடியவர்கள் என மாயாவதி தெரிவித்தார் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications