இடைத் தேர்தலில் மின்னணு எந்திரம் பயன்படுத்தினால் வழக்கு போடுவோம் - பாமக
கோவை: நான்கு சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலின் போது மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை பயன்படுத்தக் கூடாது. மீறி பயன்படுத்த நினைத்தால் வழக்கு தொடர்வோம் என பாமக மாநில தலைவர் ஜி.கே மணி தெரிவித்துள்ளார்.
கோவை வந்த அவர் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில்,
நாடாளுமன்ற தேர்தலில் மின்னணு வாக்குப் பதிவு எந்திரத்தில் செய்யப்பட்ட சதி காரணமாக தான் பாமக தோற்கடிக்கப்பட்டது. இதனால் வருகிற சட்டசபை இடைத்தேர்தலில் மின்னணு வாக்குப் பதிவு எந்திரத்தை பயன்படுத்த தடைவிதிக்க வேண்டும். இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் மனு கொடுக்க இருக்கிறோம்.
எங்கள் கோரிக்கை ஏற்காமல் மின்னணு எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டால் நீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம்.
நதி நீர் பிரச்சினையில் தமிழகம் உரிமை இழந்து தவிக்கிறது. அண்டை மாநிலங்களில் கையேந்தி நிற்கிறது. காவிரி பிரச்சனையில் இடைக்கால தீர்ப்பை கூட நாம் பெறவில்லை.
காவிரி, வைகை, தாமிரபரணி உள்ளிட்ட நதிகளில் உண்டாகும் வெள்ளநீர் வீணாக கடலில் சென்று கலக்கின்றன. இதை சேமிக்க தடுப்பணை கட்ட வேண்டும்.
ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் இருப்பது போல் பெரும் பாசன திட்டம் நம்மிடம் இல்லை. இதற்கான திட்டங்களை தமிழக அரசு வகுக்க வேண்டும்.
தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்க சாவடிகளில் கட்டணம் முறையற்ற வகையில் வசூல் செய்யப்படுகிறது. அவற்றை முறைப்படுத்த வேண்டும். விலைவாசியை கட்டுப்படுத்த அரசு உரிய முயற்சிகள் எடுக்க வேண்டும் என்றார் ஜிகே மணி.