உலக கோப்பை தோல்வி-ராஞ்சியில் டோணி உருவபொம்மை எரிப்பு

டுவென்டி-20 உலக கோப்பை தொடரில் நேற்று நடந்த சூப்பர்-8 போட்டியில் இந்திய அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்திடம் தோல்வியடைந்து அரையிறுதி வாய்ப்பை இழந்தது.
இந்நிலையில் வெற்றியும், தோல்வியும் ஒன்று என்பதை ஞாபகத்தில் வைக்க தவறிய இந்திய ரசிகர்கள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் தோல்விக்கு கேப்டன் டோணி தான் காரணம் எனக் கூறி ராஞ்சியில் உள்ள சித்து கன்கு பூங்கா பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
டோணிக்கு எதிராக கோஷமி்ட்ட அவர்கள் அவரது உருவபடத்தை எரித்தனர். வெற்றி பெற்றால் கொண்டாடுவதும், தோல்வியடைந்தார் தூற்றுவதும் இவர்களின் பொழப்பாகிவிட்டது.
அப்போது சியாமா குமார் என்ற ரசிகர் கூறுகையில், டோணி டுவென்டி-20 உலக் கோப்பையை சாதாரணமாக எடுத்து கொண்டார். அவருக்கு கிரிக்கெட்டை கவர்ச்சி தான் அதிகம் பிடிக்கிறது. அவர் விளம்பரங்களில் நடிப்பதில் தான் ஆர்வம் காட்டுகிறார் என்றார்.
ரவி குமார் என்ற மற்றொரு ரசிகர் கூறுகையில், இது அதிர்ச்சியும், ஏமாற்றமும் அளிக்கிறது. ஆஸ்திரேலியா சூப்பர்-8 சுற்றுக்கு நுழையாமல் போனதிலிருந்தாவது இந்தியா பாடம் கற்றுக் கொண்டிருக்க வேண்டும் என்றார்.
ரசிகர்களின் இந்த போராட்டத்தை தொடர்ந்து ஹார்மு சாலையில் கட்டப்பட்டு வரும் டோணியின் புதிய வீட்டுக்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கடந்த 2007ல் இந்தியா வெஸ்ட் இண்டீசில் நடந்த ஒரு நாள் உலக கோப்பை தொடரில் தோல்வியடைந்த சமயத்தில் இந்த வீட்டின் வெளிச்சுவர் ரசிகர்களால் இடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இத்தொடரின் முதல் சுற்றிலே வெளியேறிய ஆஸ்திரேலியாவுக்கு கூட அந்நாட்டில் இவ்வளவு பெரிய கண்டனம் எதுவும் எழவில்லை. சில விமர்சகர்கள் மட்டும் ஆஸ்திரேலியா டுவென்டி-20ல் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என கூறியதோடு விட்டுவிட்டனர்.
ஆனால் இந்தியாவில் தான் உருவபொம்மை எரிப்பு, வீரரின் வீட்டை தாக்குவது போன்ற காட்டுமிராண்டி தனமான சம்பவங்கள் நடக்கிறது. இந்திய அணி சூப்பர்-8 சுற்றில் ஒன்றும் மோசமாக தோற்றுவிடவில்லை. இரண்டு போட்டியிலும் கடுமையாக போராடியது. இங்கிலாந்துடனான போட்டியில் வெறும் 3 ரன்களில் தோற்றது.
விளையாட்டில் சில சமயங்களில் இது போன்ற துரதிருஷ்டமான சம்பவங்கள் ஏற்படத்தான் செய்யும். இந்த ஒரு தொடரை வைத்து டோணி தலைமையிலான இந்திய அணி சமீபகாலத்தில் குவித்து வந்த வெற்றிகளை குறை சொல்லிவிட முடியாது. அடுத்து வரும் தொடரில் இந்திய அணி கோப்பை வெல்லும் என நம்பிக்கையுடன் காத்திருப்போம்.












Click it and Unblock the Notifications