அரசாங்கத்தின் கட்டுப்பாட்டை விட்டு மாவோயிஸ்டுகள் கைக்குப் போன மே.வங்க நகரம்
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத் தலைநகர் கொல்கத்தாவிலிருந்து 200 கிலோமீட்டர் தொலைவில் உள்ள லால்கர் என்ற நகரம் கிட்டத்தட்ட அரசாங்கத்தின் வசம் இல்லை. அங்கு மாவோயிஸ்ட் நக்சலைட்டுகளே நிர்வாகத்தை நடத்தி வருகின்றனர்.
மேற்கு மிதினாப்பூர் மாவட்டத்தில் உள்ளது லால்கர் நகரம். இந்த பகுதி முழுவதுமே மாவோயிஸ்டுகள் ராஜ்ஜியமாக உள்ளது.
இங்கிருந்து போலீஸாரையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரையும் நக்சலைட்டுகள் துரத்தி விட்டனர். தங்களது முக்கிய இலக்கு முதல்வர் புத்ததேவ் பட்டசார்யாதான் என்றும் பிரகடனம் செய்துள்ளனர்.
லால்கரில் உள்ள அரசியல் மற்றும் அரசு அடையாளம் எதுவும் இல்லாமல் செய்து வருகின்றனர் மாவோ நக்சலைட்டுகளும், அவர்களது ஆதரவாளர்களும்.
லால்கர் முழுவதுமே நக்சல் ஆதரவு மயமாக காணப்படுகிறது.
தர்மாபூர் பகுதி சிபிஎம் மண்டல செயலாளர் அனுஜ் பாண்டேவின் வீட்டை நக்சல் ஆதரவாளர்கள் தரைமட்டமாக்கி விட்டனர். இதைக் கொண்டாடும் வகையில் முரசுகளை முழங்கியும், ஆட்டம், பாட்டத்துடனும் கொண்டாடி மகிழ்ந்தனர்.
பிகாஷ் என்பவர்தான் இந்த தரைமட்டமாக்கலுக்கு தலைமை தாங்கியவர். இவர் மாவோயிஸ்ட் மக்கள் விடுதலை கொரில்லாப் படையின் உறுப்பினர் ஆவார். ஒரு கையில் ஏ.கே.47 துப்பாக்கியுடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் இவர் காணப்பட்டார்.
பிகாஷ் கூறுகையில், லால்கர் பகுதி தற்போது எங்கள் வசம் வந்துள்ளது. இதை நாங்கள் எதிர்பார்த்துக் காத்திருந்தோம். ஒரு குழந்தை (புதிய நிர்வாகம்) பிறக்கப் போகிறது. அதை நாங்களே பிரசவம் பார்ப்போம் என்றார் பிகாஷ்.
ஜூன் 6ம் தேதி பிகாஷ் உள்ளிட்ட 400க்கும் மேற்பட்ட மாவோ நக்சலைட்டுகள் இந்தப் பகுதிக்குள் புகுந்தனர். அங்கிருந்த போலீஸாரையும், சிபிஎம் கட்சியினரையும் இப்பகுதியிலிருந்து துரத்தும் பணியைத் தொடங்கினர். இவர்களிடம் நூற்றுக்கணக்கான தானியங்கித் துப்பாக்கிகள் உள்ளன.
கடந்த ஆண்டு நவம்பர் 2ம் தேதி இப்பகுதியில், முதல்வர் வாகன அணிவகுப்பின்போது கண்ணிவெடித் தாக்குதலை இதே கும்பல்தான் மேற்கொண்டது. அதிலிருந்து முதல்வர் அதிர்ஷ்டவசமாக தப்பினார்.
இதுகுறித்து பிகாஷ் கூறுகையில், புத்ததேவை தீர்த்துக் கட்டுவதே எங்களது திட்டமாக இருந்தது. மேற்கு வங்கத்தால் மட்டுமே புத்ததேவை தூக்கில் தொங்க விட முடியும். அந்த செயலை நாங்களே செய்து காட்டுவோம் என்றார்.
சிபிஎம் கட்சியின் தர்மாபூர் உள்ளூர் கமிட்டி அலுவலகத்தையும் இந்க நக்சலைட் கும்பல் இடித்துத் தரைமட்டமாக்கி விட்டது. மார்க்சிஸ்ட் கட்சியினரின் ஒவ்வொரு கட்டடத்தையும் தரை மட்டமாக்கப் போவதாக அவர்கள் கூறுகின்றனர்.
இப்பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடந்த மோதலில் சிபிஎம் கட்சியைச் சேர்ந்த ஷால்கு சோரன் என்பவர் கொலை செய்யப்பட்டார். அவரது உடல் இன்னும் கூட அங்கிருந்து அகற்றப்படாமல் கிடக்கிறது.
இந்தப் பகுதியில் நிலைமை மோசமாக இருப்பதால் போலீஸாரை அனுப்பாமல் உள்ளது அரசு.












Click it and Unblock the Notifications