ஹாக்கி கோல் போஸ்ட் விழுந்து மாணவர் பலி
சென்னை: சென்னை பள்ளி ஒன்றில் ஹாக்கி கோல் போஸ்ட் மாணவர் ஒருவர் மீது விழுந்ததில் அவர் பலியானார்.
சென்னை புதுவண்ணாரப்பேட்டை பகுதியில் உள்ள கீரைத்தோட்டத்தைச் சேர்ந்த கார்த்திக் (13) அப்பகுதியில் ஜி.ஏ. சாலையில் உள்ள பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தார்.
இன்று காலை என்சிசி பயிற்சிக்காக கார்த்திக் உள்ளிட்ட 4 மாணவர்கள் 6 மணிக்கு பள்ளிக்கு வந்தனர். என்சிசி பயிற்சி துவங்கும் முன் விளையாடலாம் என நினைத்து மைதானத்துக்கு சென்றுள்ளனர்.
அப்போது கார்த்திக் மைதானதத்தில் இருந்து ஹாக்கி கோல் போஸ்ட்டில் தொங்கியபடி விளையாடியுள்ளார். அப்போது அந்த ஹாக்கி கோல் போஸ்ட் உடைந்தது. இதில் கார்த்திக் கீழே விழுந்தார். அவர் சுதாரித்து எழுவதற்குள் அந்த ஹாக்கி கோல் போஸ்ட் அவர் மீது சரிந்து விழுந்தது.
இதில் கார்த்திக்கின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரது அலறல் சத்தத்தை கேட்டு, காலை நேரத்தில் ஜாகிங் சென்று கொண்டிருந்த சிலர் அவரை மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர். ஆனால், டாக்டர்கள் வரும் வழியிலே அவரது உயிர் பிரிந்துவி்ட்டதாக தெரிவித்தனர்.
அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஸ்டேன்லி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இது தொடர்பாக ராயபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த துயர சம்பவம் காரணமாக பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது.












Click it and Unblock the Notifications