ரயில்களில் 'யூஸ் அண்ட் த்ரோ' விரிப்புகள்-போர்வைகள்
திருச்சி: ரயில்களில் ஏ.சி. பெட்டிகளில் பயணம் செய்பவர்களுக்கு ஒரு முறை பயன்படுத்திவிட்டு வீசும் (Use and throw) படுக்கை விரிப்பு, போர்வையை அறிமுகப்படுத்துகிறது தென்னக ரயில்வே.
முதல் கட்டமாக சென்னை-மதுரை இடையி்ல் இயங்கும் பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயிலில் இது அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இது குறித்து தென்னக ரயில்வே தலைமைப் பொறியாளர் கார்மெலஸ் கூறுகையில், ஒரு பயணிக்கு 2 படுக்கை விரிப்பு, ஒரு தலையணை வழங்கப்படும். இதை அவர்கள் வீட்டுக்கும் எடுத்துச் செல்லலாம். இந்தத் திட்டத்துக்கு போதிய வரவேற்பு கிடைத்தால் மற்ற ரயில்களிலும் இத் திட்டம் விரிவுபடுத்தப்படும் என்றார்.
இந்த படுக்கை விரிப்புகள் விரைவில் நசிந்துவிடும் வகையில் பிளாஸ்டிக் கலக்காமல் உருவாக்கப்பட்டுள்ளன. இதனால் இவை சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படுத்தாது.
இதற்கான கட்டணம் பயணக் கட்டணத்துடன் கூடுதலாக வசூலிக்கப்படும் என்று தெரிகிறது.
ஏசி பெட்டிகளில் வழக்கமாக பயணிகளுக்கு இரு படுக்கை விரிப்புகள், போர்வை, தலையணை ஆகியவை வழங்கப்படுகின்றன. இதி்ல் 20 சதவீத படுக்கை விரிப்புகள், போர்வைகள் திரும்பி வருவதில்லையாம். அதை பயணிகளே எடுத்துச் சென்றுவிடுகின்றனர்.
மேலும் பல பயணிகள் ரயில்வே நிர்வாகம் வழங்கும் போர்வை, படுக்கை விரிப்புகளை வாங்குவதும் இல்லை. அடுத்தவர் பயன்படுத்தியது எங்களுக்கு வேண்டாம் என்று சொல்பவர்களும் உள்ளனர்.
இந்த இரு சிக்கல்களையும் தீ்ர்க்கவே இந்த 'யூஸ் அண்ட் த்ரோ' விரிப்புகள், போர்வைகளை ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications