சென்செக்ஸ்... இன்றும் வீழ்ச்சிதான்!
மும்பை: இந்தியப் பங்குச் சந்தையில் இன்று 250 புள்ளிகளுக்கும் மேல் வீழ்ந்தது. எதிர்பார்ப்புக்கு மாறாக சர்வதேச பொருளாதார நிலைமை மேலும் மோசமாகும் சூழல் உள்ளதால், அனைத்து நாடுகளின் பங்குச் சந்தையிலும் ஒருவித நிச்சயமற்ற சூழல் நிலவியது.
இன்னொரு பக்கம் இந்தியப் பொருளாதாரத்தின் பணவாட்ட நிலை, முதலீட்டாளர்கள் மனதில் பல சந்தேகங்களை ஏற்படுத்தியதால், வர்த்தகம் கடைசி வரை சூடுபிடிக்காமலே போய்விட்டது.
வர்த்தகம் துவங்கிய சில நிமிடங்களில் 200 புள்ளிகளை இழந்த சென்செக்ஸ், வர்த்தக முடிவில் 257 புள்ளிகளை இழந்திருந்தது.
தேசிய பங்குச் சந்தை நிப்டியில் 104 புள்ளிகள் சரிந்தன.
இதனால் தொடர்ந்து 15000 புள்ளிகளுக்கும் கீழாகவே சென்செக்ஸ் குறியீட்டெண் தொடர்கிறது.
இன்று லாபம் சம்பாதித்த பங்குகள் குறைவுதான். ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா போன்ற சில பங்குகள் சுமாரான லாபத்தில் கைமாறின.
சுஸ்லான் எனர்ஜி, யுனிடெக், அம்புஜா சிமெண்ட், ஏசிசி, பவர் கிரிட் போன்றவற்றின் பங்குகள் பெரிய அளவில் நஷ்டம் தந்தன.
இன்றைய வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 14265 புள்ளிகளாகவும், நிப்டி 4251 புள்ளிகளாகவும் நிலைப் பெற்றது.