100 போலீஸ்..3 நாள் சண்டை..தப்பிய கொள்ளையன்..சுட்டுக் கொலை
லக்னோ: உ.பி. மாநிலம் சித்ரகூட் பகுதியில் கடந்த 3 நாட்களாக ஒரு கொள்ளையனைப் பிடிக்க நூற்றுக்கணக்கான போலீஸார் நடத்தி வந்த கடுமையான துப்பாக்கிச் சண்டையின்போது அந்த கொள்ளையன் தப்பினான். இருப்பினும் போலீஸார் விடாமல் அவனை சுட்டுக் கொன்று விட்டனர்.
சினிமாவையும் மிஞ்சும் வகையிலான இந்த என்கவுன்டர், உ.பி.யில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உ.பி. மாநிலம் சித்ரகூட் பகுதியைச் சேர்ந்தவன் கேவத். பயங்கர கொள்ளைக்காரன். ஏராளமான வழக்குள் உள்ளன. உ.பி., மபி ஆகிய மாநிலங்களில் கேவத்தும் அவனது கொள்ளைக் கூட்டமும் செயல்பட்டு வருகிறது.
இவர்கள் மீது 12க்கும் மேற்பட்ட கொலை, கடத்தல், திருட்டு உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பாக வழக்குகள் போடப்பட்டுள்ளன.
இவனைப் பிடித்துக் கொடுத்தால் ரூ. 50 ஆயிரம் பரிசளிக்கப்படும் எனவும் காவல்துறை அறிவித்துள்ளது.
இப்படிப்பட்ட பயங்கர கொள்ளைக்காரனான கேவத், சித்ரகூட்டில் உள்ள சுருவால் என்ற கிராமத்தில் ஒரு வீட்டில் பதுங்கியிருப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.
நீண்ட காலமாக தேடி வரும் இவனை இம்முறை எப்படியும் பிடித்து விட வேண்டும் என்ற முடிவில் நூற்றுக்கணக்கான போலீஸார் (அத்தனை பேர் கையிலும் பெரிய பெரிய துப்பாக்கி) அங்கு விரைந்தனர். வீட்டை முற்றுகையிட்ட அவர்களுடன், கொள்ளையன் கேவத் தனி நபராக மோதினான்.
இரு தரப்புக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை மூண்டது. கடந்த மூன்று நாட்களாக இந்த சண்டை நடந்து வந்தது.
இப்படி மூன்று நாட்களாக சண்டை நடந்தும் கேவத்தைப் பிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் போலீஸாரின் கண்களில் மண்ணைத் தூவி விட்டு தப்பினான் கொள்ளையன்.
இதனால் போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர். இருப்பினும் அந்தப் பகுதி முழுவதையும் அவர்கள் சல்லடை போட்டனர். இதில் கேவத் சிக்கினான். அவனை போலீஸார் சுட்டுக் கொன்று 3 நாள் வேட்டையை முடிவுக்குக் கொண்டு வந்தனர்.
ஒரு கொள்ளையனைப் பிடிக்க நடந்த இந்த சண்டையின்போது போலீஸ் தரப்பில் இருவர் கொல்லப்பட்டனர். ஒரு இன்ஸ்பெக்டர் மற்றும் டிஐஜி ஆகியோர் காயமடைந்தனர். ஒரே ஒரு கொள்ளையனைப் பிடிக்கப் போய் இரு உயர் அதிகாரிகள் காயமடைந்திருப்பதும், இரு காவலர்கள் உயிரிழந்திருப்பதும் உ.பி. காவல்துறையை கடும் விமர்சனத்துக்குள்ளாக்கியுள்ளது.












Click it and Unblock the Notifications