ராகுல் பிறந்த நாள் - உ.பியில் தலித்களுடன் காங். கொண்டாட்டம்
டெல்லி: காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தியின் 39வது பிறந்த நாள் இன்று காங்கிரஸாரால் கொண்டாடப்பட்டது. உத்தரப் பிரதேசத்தில் தலித் மக்களுடன் இணைந்து காங்கிரஸார் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.
காங்கிரஸார் ராகுல் காந்தியின் பிறந்த நாளை இந்தியாவில் கொண்டாடினாலும் கூட ராகுல் காந்தி இந்தியாவில் இல்லை. வெளிநாட்டுக்கு போயுள்ளார்.
ராகுல் பிறந்த நாளை வைத்து தலித் மக்களின் நம்பிக்கையைப் பெற உ.பி. காங்கிரஸார் இன்று தலித் மக்ளுக்கான விழாவாக, நல்லிணக்க தினமாக இன்றைய தினத்தை அறிவித்து கொண்டாடினர்.
மாநிலம் முழுவதும் தலித் மக்களை இணைத்துக் கொண்டு ராகுல் காந்தியின் பிறந்த நாளை அவர்கள் கொண்டாடினர். மாயாவதியிடமிருந்து தலித் மக்களை இழுக்கும் முயற்சியாகவே இது அரசியல் கண்ணோட்டத்தில் பார்க்கப்படுகிறது.
உ.பியில் ஆட்சியைப் பிடிக்க தலித் வாக்கு வங்கியை குறி வைக்குமாறு ராகுல் காந்திதான் யோசனை தெரிவித்துள்ளாராம். இதன் மூலம் உ.பியில் கை விட்டுப் போன காங்கிரஸ் ஆட்சியை மீண்டும் பிடிக்க முடியும் என்று அவர் நம்புகிறார். இதையடுத்தே தலித்களுக்கான விழாவாக இன்றைய தினத்தை காங்கிரஸார் கொண்டாடி வருகின்றனர்.
ராகுல் காந்திதான் உண்மையான தலித் தலைவர் என்றும் அவர்கள் பெருமை பொங்க கூறுகின்றனர்.
தமிழகத்திலும் இன்று ராகுல் காந்தியின் பிறந்த நாளை இளைஞர் காங்கிரஸார் சிறப்பாக கொண்டாடினர்.