பாலாறு-ஆந்திராவுக்கு சாதகமாக மத்திய அமைச்சர்!

ஜெய்ராம் ரமேஷை நானே நேரில் சந்தித்து அனுமதி அளிக்கக்கூடாது என்று வலியுறுத்துவேன் என்றார்.
தமிழக சட்டமன்றத்தில் இன்று பொதுப்பணித்துறை மானியக் கோரிக்கை மீது நடைபெற்ற விவாதத்தில் பேசிய அதிமுக உறுப்பினர் சண்முகவேலு,
பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு அணை கட்டுவதற்கு 15 நாளில் அனுமதி வழங்கப்படும் என்று மத்திய வனத்துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் அறிவித்துள்ளார். தமிழக அரசு உடனே மத்திய அரசுடன் பேசி இந்த முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும் என்றார்.
இதற்கு பதிலளித்த துரைமுருகன் கூறுகையில்,
பாலாற்றின் குறுக்கே அணை கட்டும் அறிவிப்பை ஆந்திர அரசு வெளியிட்டதுமே தமிழக அரசு அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.
மத்திய அரசு இரு மாநிலங்களையும் அழைத்துப் பேசி இந்த பிரச்சனைக்கு சுமூக தீர்வு காணுமாறு உச்ச நீதிமன்றம் ஆலோசனை வழங்கியது. அதன் அடிப்படையில் மத்திய நீர்வள ஆணையமும் இரு மாநிலங்களையும் அழைத்துப் பேசியது.
இரு மாநிலங்களும் புள்ளி விவரங்களை தந்துள்ளோம். இது தவிர ஒரு குழு அமைத்து ஆய்வு செய்ய தமிழ்நாட்டிலிருந்து ஒரு பொறியாளரை கேட்டார்கள். தமிழக அரசும் அவரை நியமனம் செய்திருக்கிறது. இந் நிலையில் பாலாற்றில் அணை கட்டுவதற்கான எந்த பணிகளையும் செய்யக்கூடாது என்று மத்திய நீர்வள ஆணையம் உத்தர விட்டுள்ளது. வழக்கும் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
ஆனால் ஆந்திர மாநில அரசு அணை கட்டுவதற்கு 15 நாட்களில் அனுமதி வழங்கப்படும் என்று மத்திய வனத்துறை அமைச்சர் ஜெயராம் ரமேஷ் அறிவித்திருப்பது எனக்கு அதிர்ச்சியையும், ஆத்திரத்தையும் அளிப்பதாக உள்ளது.
இந்த அமைச்சர் தமிழகத்தையும் நன்கு அறிந்தவர். அவரிடம் அணை பற்றிய விவரங்களை முழுமையாக தெரிவித்திருக்க மாட்டார்கள் என்றே கருதுகிறேன். ஒருவேளை தெரிந்திருந்தும் அவர் இந்த முடிவுக்கு வந்திருந்தால் அவரை நானே நேரில் சந்தித்து நம்முடைய உரிமைகளை நிலைநாட்டுவேன்.
அவரிடம் தமிழக அரசின் சார்பில் உண்மை நிலவரங்களை தெரிவித்து அணைக்கு அனுமதி வழங்குவது உகந்ததல்ல என்று தெரியப்படுத்துவேன் என்றார் துரைமுருகன்.
அடுத்த ஆண்டு புதிய சட்டசபை:
பின்னர் பொதுப்பணித்துறை மானிய கோரிக்கை மீதான கொள்கை விளக்க குறிப்புகளை துரைமுருகன் தாக்கல் செய்தார். அதில்,
சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய சட்டசபை கட்டும் பணி வேகமாக நடந்து வருகிறது. இந்த வளாகம் 2 பிளாக்குகளாக கட்டப்படுகிறது.
பிளாக்-ஏ வளாகத்தில் சட்டப்பேரவை, சட்டப் பேரவை செயலகம், கவர்னர், முதல்வர், அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் அலுவலகங்கள் மற்றும் பல முக்கிய துறைகளின் அலுவலகங்கள் அமையும்.
ரூ.425.57 கோடியில் இந்த பிளாக் அடுத்த ஆண்டு மே மாதம் இது கட்டி முடிக்கப்படும்.
பிளாக்-பியில் 30க்கும் மேற்பட்ட துறைகளை உள்ளடக்கிய புதிய தலைமை செயலக கட்டிடம் கட்ட ரூ.280 கோடிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications