கருணாநிதியுடன் பரூக் அப்துல்லா சந்திப்பு - காற்றாலை மின்சாரம் குறித்து ஆலோசனை
சென்னை: முதல்வர் கருணாநிதியை மத்திய மரபு சாரா எரி சக்தித்துறை அமைச்சர் பரூக் அப்துல்லா இன்று சந்தித்துப் பேசினார். அப்போது தமிழகத்தில் காற்றாலை மின்சார உற்பத்தியை அதிகரிப்பது குறித்து பேசப்பட்டதாக பரூக் அப்துல்லா தெரிவித்தார்.
மத்திய அமைச்சராகியுள்ள பரூக் அப்துல்லா சென்னைக்கு வந்துள்ளார். இன்று அவர் முதல்வர் கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.
சந்திப்பின்போது அமைச்சர் ஆற்காடு வீராசாமி, ராஜ்யசபா எம்.பி. கனிமொழி ஆகியோர் இருந்தனர்.
சந்திப்புக்குப் பின்னர் பரூக் அப்துல்லா செய்தியாளர்களிடம் பேசுகையில், மரியாதை நிமித்தமாக முதல்வரை சந்தித்தேன். உடல் நலம் விசாரித்தேன். கருணாநிதி இந்திய அரசியலில் மூத்த தலைவர். எனது தந்தைக்கும் அவர் நெருங்கிய நண்பர். நாட்டுக்கு பெருமை சேர்க்கும் தலைவர்களில் ஒருவர்.
தமிழ்நாட்டில் மரபுசாரா மின் உற்பத்தி அதிகமாக உள்ளது. குறிப்பாக காற்றாலை மூலம் தமிழ்நாட்டில்தான் இந்தியாவிலேயே அதிக அளவில் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் மேலும் அதிக மின்சாரத்தை காற்றாலைகள் மூலம் தயாரிக்க மத்திய அரசு முழு ஒத்துழைப்பு கொடுக்கும்.
தமிழ்நாட்டில் கடலோர பகுதிகளில் காற்றாலைகள் அமைத்து அதிக மின்சாரம் தயாரிக்கலாம் என்று கோரிக்கை விடப்பட்டுள்ளது. அதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
தமிழக மின் திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆற்காடு வீராசாமி பேசினார். தேவையான உதவிகளை மத்திய அரசு செய்யும் என்றார் பரூக்.












Click it and Unblock the Notifications