இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு சுமூக தீர்வு காண சரியான நேரம் - பாஜக
டெல்லி: இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு சுமூகமான தீர்வு காண இதுவே சரியான நேரம். இதை மத்திய அரசும், இலங்கை அரசும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என பாஜக செயற்குழுக் கூட்டத்தில் கூறப்பட்டது.
செயற்குழுக் கூட்டத்தில் கட்சித் தலைவர் ராஜ்நாத் சிங் பேசுகையில்,
இலங்கை இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு எந்தவித ஆக்கப்பூர்வமான நடவடிக்கையையும் இந்திய அரசு மேற்கொள்ளவில்லை.
தமிழர்கள் அச்சமின்றி சுதந்திரமாகவும் நம்பிக்கையுடனும் வாழ்வதற்கேற்ற நடவடிக்கைகளை இலங்கை அரசு மேற்கொள்ளும் என்று நாங்கள் நம்புகிறோம்.
சிங்களர்கள் மற்றும் தமிழர்களுக்கு இடையே பரஸ்பர நம்பிக்கையை உருவாக்கும் வகையில் அந்த நடவடிக்கைகள் இருக்க வேண்டும். இந்த குறிக்கோளை அடையும் வகையில் இந்தியாவின் முயற்சிகளும் அமைய வேண்டும்.
விடுதலைப்புலிகள் வீழ்ச்சியடைந்துள்ள சூழநிலையில், தமிழர் பிரச்சினைக்கு நிலையான அரசியல் தீர்வு காணவேண்டிய முழு பொறுப்பும் இலங்கை அரசுக்கு உள்ளது.
இலங்கையின் இறையாண்மையை நாங்கள் முற்றிலுமாக மதிக்கிறோம். அதே நேரத்தில், ஒருங்கிணைந்த இலங்கையில் தமிழர்களுக்கு சரியான பிரதிநிதித்துவம் அளிக்கப்பட வேண்டும். இலங்கை அரசியல் நடைமுறையில் தமிழர்களுக்கு உரிய பங்கை அளிப்பதுதான் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வாக அமையும்.
வெளிநாடுகளில் இந்தியர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை மத்திய அரசு கண்டு கொள்ளாமல் இருக்கிறது.
குறிப்பாக, ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் மீது இனவெறி தாக்குதல் நடைபெற்றதை உதாரணமாக கூறலாம். வெளிநாடு வாழ் இந்தியர்கள் பிரச்சினையில் மற்ற நாடுகளுடன் தெளிவான மற்றும் உறுதியான நேரடி கொள்கையை வகுக்க வேண்டும் என்றார் சிங்.












Click it and Unblock the Notifications