கடையநல்லூரில் வாந்தி பேதி- 30 பேர் மருத்துவமனையில் அனுமதி
கடையநல்லூர்: கடையநல்லூரில் 30க்கும் மேற்பட்ட மக்கள் வாந்தி, பேதி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கடையநல்லூர் பகுதியில் கடந்த சில மாதங்களாக பாதுகாக்கப்பட்ட குடிநீர் சரியாக வினியோகிக்கப்படாததாலும், சுகாதார சீர்கேடு காரணமாகவும் பல்வேறு தொற்று நோய்கள் பரவி வருகின்றன.
கடந்த இரு தினங்களாக மேலகடையநல்லூர், முத்துகிருஷ்ணாபுரம், முத்துசாமியாபுரம், கிருஷ்ணாபுரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 30க்கும் மேற்பட்டோர் வாந்தி பேதியால் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
குடிநீரில் சாக்கடை நீர் கலந்ததாலும், பல்வேறு இடங்களில் குப்பைகள் நிரம்பி சுகாதார சீர்கேடாக இருப்பதாலும் வாந்தி,பேதி ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
எனவே பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குவதுடன் துரித நடவடிக்கை எடுத்து குப்பைகளை அள்ள வேண்டும் எனவும், வாந்தி பேதி மேலும் பரவாமல் இருக்க சுகாதார அதிகாரிகள் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.