ஈராக்கில் 'டிரக்' குண்டு வெடித்து 72 பேர் பலி

ஈராக்கை அமெரிக்கா கைப்பற்றிய நாளில் இருந்தே அங்கு அடிக்கடி தற்கொலை படை தாக்குதல் நடந்து வருகிறது. இந்நிலையில் அமெரிக்கா இந்த மாதம் 30ம் தேதி முதல் கொஞ்சம் கொஞ்சமாக படைகளை ஈராக்கில் இருந்து வாபஸ் வாங்க திட்டமிட்டுள்ளது. 2012ம் ஆண்டுக்குள் அமெரிக்க ராணுவம் முழுமையாக திரும்ப பெறப்படும் என தெரிகிறது.
இதையடுத்து அந்நாட்டு பிரதமர் ஈராக்கில் மேலும் பல குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடைபெறும் வாய்ப்பு இருக்கிறது மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என கேட்டு கொண்டார்.
இந்நிலையில் ஈராக்கின் முக்கிய நகரங்களில் ஒன்றான கிர்கூக்கிற்கு தெற்கே சுமார் 16 கிமீ., தூரத்தில் இருக்கும் தாஷா என்ற பகுதியில் இருக்கும் மசூதியில் டிரக் வெடிகுண்டு வெடித்தது.
இதில் மசூதியில் வழிபாடு நடத்தி விட்டுத் திரும்பி கொண்டிருந்த ஏராளமானவர்கள் பலியானார்கள். அந்த மசூதி மற்றும் அருகில் இருந்த பல வீடுகள் முற்றிலுமாக சேதமடைந்தது.
இந்த விபத்தில் சுமார் 72க்கும் மேற்பட்டோர் பலியாகி இருப்பார்கள் என தெரிகிறது. 200க்கும் மேற்பட்ட மக்கள் படுகாயம் அடைந்தனர். இதுவரை இந்த தாக்குதலுக்கு எந்த இயக்கமும் பெறுப்பேற்கவில்லை.
இந்த தாக்குதல் சம்பவத்துக்கு அல் கொய்தா அல்லது வேறு எதாவது உள்ளூர் தீவிரவாத இயக்கம் காரணமாக இருக்கும் என ஈராக் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஈராக்கில் இந்த ஆண்டு நடத்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதல் சம்பவம் இது தான். கடந்த ஏப்ரல் 24ம் தேதி பாக்தாத் மசூதி மீது நடத்தப்பட்ட தாக்குதலில் சுமார் 71 பேர் பலியாகியிருந்தனர்.
இந்த சம்பவத்தை நேரில் பார்த்த எக்சன் முசிர் சுகூர் கூறுகையில், அந்த டிரக், எங்கள் வீட்டுக்கு அருகை மசூதி வாசலில் நிறுத்தப்பட்டிருந்தது. நான் டிரைவர் வழிபாட்டுக்கு சென்று இருக்கிறார் என நினைத்தேன். அந்த குண்டு வெடித்ததில் வீடுகளில் இருந்த பெண்களும், குழந்தைகளும் சேர்ந்து பலியானார்கள்.
எனது மனைவிக்கும், தங்கைக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. என் தங்கையின் குழந்தைகள் இருவரும் பலியாகிவிட்டார்கள் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications