ரூ. 25 கோடி மோசடி: பிரமிட் சாமிநாதன் கைது-ஜாமீனில் விடுதலை

தமிழ் திரை உலகில் பிரபலமான சினிமா தயாரிப்பு நிறுவனமாக வலம் வந்தது பிரமிட் சாய்மீரா. தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில் பெரும்புகழ் பெற்றவர் அதன் தலைவரான சாமிநாதன்.
பல படங்களைத் தயாரித்தார், வாங்கி வினியோகித்தார். ஆனால், தொடர்ந்து நஷ்டத்தை சந்தித்து வந்த இந்த நிறுவனம் ரஜினியின் குசேலன் படத்தை பல கோடிக்கு வாங்கியதால் மேலும் வீழ்ச்சியடைந்தது. இந்தப் படத்தால் இந்த நிறுவனத்துக்கு மாபெரும் நஷ்டம் ஏற்பட்டது.
ஆனாலும் விடாமல் நான் கடவுள் படத்தையும் தயாரித்து வினியோகித்தார் சுவாமிநாதன். ஆனால் இந்தத் தொழிலில் அவரால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. பெரும் நஷ்டத்தை சந்தித்தார்.
இந்நிலையில் கமல்ஹாசனுடன் அவர் ரூ.150 கோடியில் தயாரிப்பதாக அறிவிக்கப்பட்ட மர்மயோகி கைவிடப்பட்டது. இந்தப் படத்துக்காக முன்னேற்பாடுகள் செய்த வகையிலும் பல கோடி நஷ்டம் ஏற்பட்டது சாமிநாதனுக்கு.
தமிழகம் முழுவதும் இந்த நிறுவனம் வாடகைக்கும், குத்தகைக்கும் எடுத்து நடத்திய பல திரையரங்குகளால் வருமானமே வரவில்லை. அவற்றை இழுத்து மூடும் நிலை ஏற்பட்டது. இதனால் பல திரையரங்குகள் இவர்களது கட்டுப்பாட்டிலிருந்து விலகிக் கொண்டன.
பெரும் பணச் சிக்கலில் அவர் சிக்கித் தவித்த சுவாமிநாதன் படத் தயாரிப்பிலிருந்து ஒதுங்கியிருந்தது.
சமீபத்தில் பங்குகள் விற்பனை தொடர்பாக இந்திய பங்கு விற்பனை கட்டுப்பாட்டு அமைப்பான 'செபி'க்கு எழுதப்பட்ட கடிதம் தொடர்பான சிக்கலில் மாட்டியது இந்த நிறுவனம். இந்தக் கடிதத்தை நாங்கள் எழுதவே இல்லை என்று பல்டி அடித்ததது பிரமிட் நிறுவனம்.
இந் நிலையில் ஹரியாணாவை சேர்ந்த டெல்லி பப் என்ற நிதி நிறுவனத்தின் அதிபர் கார்கூன் டெல்லி போலீசில் சுவாமிநாதன் ஒரு புகார் கொடுத்தார். அதில் தன்னிடம் சுவாமிநாதன் ரூ.25 கோடியை வாங்கிக் கொண்டு மோசடி செய்துவிட்டதாகக் கூறியிருந்தார்.
சுவாமிநாதன் கொடுத்திருந்த அனைத்து செக்குகளும் வங்கியில் பணமின்றி பவுன்ஸ் ஆகிவிட்டதால் இந்தப் புகாரை தந்தார் அவர்.
இந்தப் புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணைக்காக ஆஜராகுமாறு சுவாமிநாதனுக்கு நோட்டீசும் அனுப்பினர். ஆனால், அவர் ஆஜராகவில்லை.
இந் நிலையில் சுவாமிநாதனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிடப்பட்டது. இதைத் தொடர்ந்து ஹரியாணா போலீசார் சென்னை வந்தனர்.
சென்னை புறநகர் போலீசார் உதவியோடு இன்று காலை சுவாமிநாதனை அவரது மடிப்பாக்கம் வீட்டில் வைத்து ஹரியாணா போலீசார் கைது செய்தனர்.
அப்போது போலீசாருடன் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். கைதாக முரண்டு பிடித்தார். ஆனால் கையை மீறி போய்விட்டதை உணர்ந்த பின் பேசாமல் போலீசாருடன் சென்றார்.
ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்!
இதையடுத்து அவர் தாம்பரம் நீதிமன்றம் கொண்டு செல்லப்பட்டார்.
வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கில் சாமிநாதனை ரிமாண்டில் வைக்க வேண்டிய அவசியமில்லை என்றும், அவர் முறையாக விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து சாமிநாதன் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். நாளை அவர் ஹரியானாவில் உள்ள குர்காவ்ன் காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராகிறார்.












Click it and Unblock the Notifications