மதுரை, கோவை, திருச்சியில் ஏசி டவுன் பஸ்கள்
மதுரை: சென்னை மாநகரை போல மதுரை, கோவை, திருச்சியிலும் ஏ.சி. டவுன் பஸ்களை இயக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
மத்திய அரசின் ஜவகர்லால் நேரு நகர்ப்புற வளர்ச்சி திட்டத்தின் சார்பில் ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது. அந்த கமிட்டி நாடு முழுவதும் பயணம் செய்து, மாநில அரசுக்கு சொந்தமான போக்குவரத்துக் கழகங்கள் செயல்படும் விதம் குறித்து ஆய்வு செய்தது.
பின்பு அந்த கமிட்டி மத்திய அரசின் நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகத்திடம் ஒரு அறிக்கையை தாக்கல் செய்தது. அந்த அறிக்கையில்,
நாடு முழுவதும் 40,000 பேருந்துகள் மிகவும் மோசமான நிலையில் இயங்கி வருகின்றன, இந்த பேருந்துகளை மாற்றி புதிய சொகுசு பேருந்துகளை இயக்க வேண்டும், அதற்காக மாநில அரசு போக்குவரத்து கழகங்களுக்கு மானிய அடிப்படையில் கடன் வழங்கலாம் என அந்த அறிக்கையில் கூறப்பட்டது.
இதையடுத்து மத்திய அரசின் நிதியுதவியுடன் மதுரை, திருச்சி, கோவை போன்ற மாநகர போக்குவரத்துக் கழகங்களுக்கும் ஏசி பஸ்களை வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.