ஆடு..ஓநாய்..: இன்றும் அதிமுக வெளிநடப்பு, கூடவே மதிமுகவும்
சென்னை: சட்டசபையில் இருந்து இன்றும் அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
கடந்த 19ம் தேதி சட்டசபையில் விவசாயத்துறை மானிய கோரிக்கையின் மீதான விவாதத்தின்போது அமைச்சர் வீரபாண்டி அறுமுகத்திடம் அதிமுக எம்எல்ஏக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது ''ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழலாமா'' என்ற பழமொழியைச் சொன்னார் அமைச்சர். இதற்கு அதிமுகவினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். அந்தப் பழமொழியை அவைக் குறிப்பிலிருந்து அதிமுகவினர் நீக்கக் கோரினர்.
அப்போது பதிலுக்கு அதிமுக உறுப்பினர் பாண்டுரங்கனும் ஒரு பழமொழியைக் கூற அதை திமுகவினர் எதிர்த்தனர். இதையடுத்து இரு பழமொழிகளையும் நீக்கலாம் என அதிமுக உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் கோரின. ஆனால், பாண்டுரங்கன் பேசியது மட்டும் நீக்கப்பட்டது.
அதிமுகவினர் இதை எதிர்த்து கடும் அமளியி்ல் ஈடுபட்டதால் முதல்வர் கருணாநிதி குறுக்கிட்டு,
எந்த கட்சியினரையும் குறிப்பிடாமல் அமைச்சர் பொதுவாக பழமொழியை கூறியதால் அதை நீக்க வேண்டிய அவசியம் இல்லை. தற்போதைய நிலையில் இந்த வாசகம் ஐயத்திற்கு உரியதாக இருப்பதால் ஒரு நாள் வரையில் அந்த வாசகம் இடம் பெறாமல் உத்தரவிடலாம்.
அவை நடவடிக்கை குறிப்பை சபாநாயகர் வாங்கிப் பார்க்கலாம். வீரபாண்டி ஆறுமுகம் பொதுவாக கூறியிருந்தால் அது அவைக் குறிப்பிலே இடம் பெறலாம். நாளை வரை பொறுத்திருந்து சபாநாயகர் முடிவெடுக்க வேண்டும். அதுவரை அந்த வாசகத்தை அவைக் குறிப்பில் இடம் பெறாமல் ஒத்திவைக்கலாம் என்றார்.
ஆனால், அதை ஏற்காமல் அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.
அதன்படி அந்த வாசகம், அன்று அவைக்குறிப்பில் இடம் பெறவில்லை. இந் நிலையில் இன்று சட்டசபை கூடியதும் பழமொழி பிரச்சனைக்கு சபாநாயகர் தீர்ப்பு வழங்கினார்.
அவர் கூறுகையி்ல், ''ஆடு நனைகிறதே ஓநாய் அழுவதாக'' அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் சொன்ன பழமொழி நேரடியாக எதிர்க்கட்சியினரை குறிப்பிடவில்லை. 1999ம் ஆண்டு பாமக உறுப்பினர் ராமச்சந்திரன், இதே பழமொழியை குறிப்பிட்டுள்ளார்.
இப்போதும் இது பழமொழியாகத்தான் குறிப்பிடப்பட்டுள்ளது. தனிப்பட்ட யாரையும் குறிப்பிடும் வகையில் இடம் பெறவில்லை.
அன்றைய முதல்வர் ஜெயலலிதா, அமைச்சர் பொன்முடி பற்றி குறிப்பிடும்போது குரங்கு கையில் கிடைத்த பூ மாலை என்று அவரது இலாகா பற்றி குறிப்பிட்டு பேசியுள்ளார். அதுவும் அவைக்குறிப்பில் இடம் பெற்றுள்ளது.
ஆனால், வீரபாண்டி ஆறுமுகம் சொன்ன பழமொழி யாரையும் குறிப்பிடவில்லை. மேலும் இது சட்டசபை மரபுக்கு எதிரான வார்த்தையும் இல்லை. எனவே 19ம் தேதி வேளாண்மைதுறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் பேசிய வார்த்தை அவை குறிப்பில் இடம் பெறும் என்றார்.
இதற்கு அதிமுக எம்எல்ஏக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதிமுக எம்எல்ஏ பாண்டுரங்கன் எழுந்து, சாத்தான் வேதம் ஓதலாமா? என்றார்.
அப்போது குறுக்கிட்ட முதல்வர் கருணாநிதி, உறுப்பினர் பாண்டுரங்கன் சாத்தான் வேதம் ஓதலாமா? என்று கேட்கிறார். ஓதலாம், அவர் பேசலாம் என்று கூறி பாண்டுரங்கன் சொன்ன வார்த்தையை அவருக்கே திருப்பிவிட்டார்.
இதையடுத்து அதிமுக உறுப்பினர் பன்னீர்செல்வம் எழுந்து அமைச்சர் குறிப்பிட்ட வாசகம் சட்டசபை மரபுக்கு எதிரானது தான். அதை நீக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். ஆனால் ஒரு நாள் அவகாசம் கொடுத்து, அதை மீண்டும் சேர்த்துள்ளனர். இதைக் கண்டித்து வெளிநடப்பு செய்கிறோம் எனறார்.
உடனே அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர்.
அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து மதிமுக எம்எல்ஏக்களும் சேர்ந்து வெளிநடப்பு செய்தனர். ஆனால், சிறிது நேரத்திலேயே அதிமுக, மதிமுக எம்எல்ஏக்கள் மீண்டும் அவைக்குத் திரும்பினர்.












Click it and Unblock the Notifications