புதிய ரேசன் கார்டுகளே வழங்கவில்லை-அதிமுக
சென்னை: அதிமுக ஆட்சியில் 38 லட்சம் புதிய ரேசன் கார்டுகள் வழங்கப்பட்டன. ஆனால் திமுக ஆட்சியில் புதிதாக ரேசன் கார்டுகளே வழங்கப்படவில்லை என்று அதிமுக உறுப்பினர் செங்கோட்டையன் சட்டசபையில் புகார் கூறினார்.
சட்டசபையில் இன்று கூட்டுறவு மற்றும் உணவுத்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடந்தது. அதன் விவரம்:
செங்கோட்டையன் (அதிமுக): தமிழ்நாட்டில் 1 ரூபாய்க்கு 1 கிலோ அரிசி கொடுப்பதாக சொல்கிறார்கள். மலிவு விலையில் மளிகை பொருட்கள் வழங்குவதாகவும் சொல்கிறார்கள். ஆனால் அவை தரமானதாக இல்லை. ரேசன் அரிசி தாராளமாக கடத்தப்படுகின்றன.
அமைச்சர் வேலு: ரேசன் அரிசியை கொண்டு வரும் லாரிகள் முறைப்படி குறிப்பிட்ட இடத்துக்கு வந்து சேர வழிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. லாரிபகள் குறிப்பிட்ட வழியாக செல்லாமல் வேறு வழியில் சென்றாலே அவைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
அரிசி கடத்தல் தொடர்பாக 4216 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டு, அரிசி கடத்துபவர்கள் மீது குண்டர் சட்டமும் பாய்கிறது.
செங்கோட்டையன்: அதிமுக ஆட்சியில் 38 லட்சம் புதிய ரேசன் கார்டுகள் வழங்கப்பட்டன. ஆனால் அவர்களுக்கும் இன்றும் முழுமையாக மண்ணெண்ணெய் வழங்கப்படவில்லை. இந்த ஆட்சியில் புதிதாக ரேசன் கார்டுகளே வழங்கப்படவில்லை.
அமைச்சர் வேலு: கடந்த ஆட்சியில் நீங்கள் 38 லட்சம் புதிய ரேசன் கார்டுகளை வழங்கி விட்டு அதற்கு மண்ணெண்ணெய் ஒதுக்கீடு செய்யவில்லை. ஆனால் நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் எல்லா ரேஷன் கார்டுகளுக்கும் மண்ணெண்ணெய் வழங்கி இருக்கிறோம். தற்போது 12 லட்சத்து 80 ஆயிரத்து 314 ரேசன் கார்டுகள் புதிதாக வழங்கப்பட்டுள்ளன. எனவே புதிய ரேசன் கார்டுகள் வழங்கவில்லை என்று கூறுவது தவறு.
செங்கோட்டையன்: ஒரு ரேஷன் கார்டுக்கு 20 கிலோ அரிசி வழங்குவதாக கூறுகிறீர்கள். ஆனால் 10 கிலோவுக்கு மேல் வழங்கப்படுவதில்லை.
அமைச்சர் வேலு: இந்தக் குற்றச்சாட்டும் தவறானது. தகுதியுள்ள அனைத்து ரேசன் கார்டுகளுக்கும் 20 கிலோ அரிசி வழங்கப்படுகிறது என்றார்.












Click it and Unblock the Notifications