புழல் சிறைக்குள் கஞ்சா கடத்திய சிறை வார்டர் கைது
சென்னை: தாதா வெல்டிங் குமார் கொலைச் சம்பவ பாதிப்பு இன்னும் மறையாத நிலையில் புழல் சிறைக்குள் பெருமளவிலான கஞ்சா உள்ளிட்ட போதை வஸ்துக்களை கடத்த முயன்ற தலைமை வார்டர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை புழல் சிறைக்குள் சமீபத்தில் ரவுடி வெல்டிங் குமார் கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தின் மூலம் சிறைக்குள் செல்போன்கள், இரும்புக் கம்பி, கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள், சிகரெட், கஞ்சா போன்ற போதை வஸ்துக்குள் தங்கு தடையின்றி புழங்கி வருவது தெரிய வந்தது.
இதையடுத்து சிறை வாசல்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது. கைதிகளைப் பார்க்க வரும் உறவினர்கள் கடும் சோதனைக்குப் பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.
இருப்பினும் கஞ்சா உள்ளிட்டவை கடத்தப்படுவது தங்கு தடையின்றி தொடர்ந்து வருவது தற்போது நிரூபணமாகியுள்ளது. தலைமை வார்டர் ஒருவரே கடத்தலில் ஈடுபட்டு கைதாகியுள்ளார்.
தலைமை வார்டர் பாலகிருஷ்ணன் (50) நேற்று முன்தினம் இரவு பணிக்கு சென்ற போது அவரது நடையில் மாற்றம் தெரிந்தது.
இதையடுத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த சிறைக் கண்காணிப்பாளர் ராஜேந்திரன், கூடுதல் கண்காணிப்பாளர் கருப்பண்ணன் ஆகியோர் பாலகிருஷ்ணனை சோதனை செய்தனர்.
அப்போது பாலகிருஷ்ணனின் ஷூவில் 49 பொட்டலங்கள் கஞ்சா (மொத்தம் 75 கிராம்), 3 பாக்கெட் சிகரெட், 3 பாக்கெட் மூக்கு பொடி மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.
இது குறித்து கண்காணிப்பாளர் ராஜேந்திரன் புழல் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து பாலகிருஷ்ணனை கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications