சுற்றுலா பயணிகளிடம் 100 மதுபான பாட்டில்கள் பறிமுதல்
பாபநாசம்: பாபநாசம் பகுதியில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் பயணிகள் வைத்திருந்த 100க்கும் மேற்பட்ட மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்யப்பட்டு, உடைத்து அழிக்கப்பட்டது.
ஜூன், ஜூலை மாதத்தில் தென் மேற்கு பருவமழை காலத்தில் குற்றாலத்துக்கு சுற்றுலா வரும் அனேக பயணிகள் முண்டந்துறை, அகஸ்தியர் அருவி, பாணதீர்த்தம் ஆகிய பகுதிகளுக்கும் சென்று உற்சாகமாக இருப்பார்கள்.
இந்நிலையில் நேற்று பாபநாசத்தில் உள்ள சோதனை சாவடியில் வனத்துறையினரும், விகேபுரம் இன்ஸ்பெக்டர் சிவகுமார் தலைமையில் போலீசாரும் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது அவர்கள் மதுபான பாட்டில்களுடன் வந்த ஏராளமான பயணிகளை பிடித்தனர். அவர்களிடம் இருந்த மதுபாட்டில்கள் பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த பாட்டில்களை பாறையில் உடைத்து அழித்தனர்.
இது குறித்து இன்ஸ்பெக்டர் சிவகுமார் கூறுகையில், சுற்றுலா தலங்களில் மதுபாட்டில்களை பயணிகள் கொண்டு செல்வதால் குடித்து விட்டு வாய் தகராறு, கைகலப்பு, பெண்களிடம் சில்மிஷம் போன்ற சம்பவங்கள் நடக்கின்றன.
இவைகளை தடுக்க அங்கு மதுபானங்கள் கொண்டு செல்வது தடை செய்யப்பட்டுள்ளது. அதையும் மீறி பயணிகள் மதுபாட்டில்களை கொண்டு செல்வதால் சோதனை நடத்தப்பட்டது என்றார்.












Click it and Unblock the Notifications