மீனவர்கள் கோஷ்டி மோதல்-போலீஸ் துப்பாக்கி சூடு
புதுச்சேரி: புதுச்சேரியில் இரு பிரிவு மீனவர்களுக்கு இடையே ஏற்பட்ட கோஷ்டி மோதலில் பல வீடுகள் சூறையாடப்பட்டன. கலவரம் கட்டுகடங்காமல் போவதை கண்டு போலீசார் தடியடி மற்றும் துப்பாக்கி சூடு மூலம் பதட்டத்தை தணித்தனர்.
புதுச்சேரி வம்பா கீரப்பாளையத்தில் உள்ள அங்காள அம்மன்கோவில் கும்பாபிஷேகத்தை முன்னி்ட்டும், கடலில் மீன்பிடிப்பது தொடர்பாகவும் இரு பிரிவு மீனவர்களுக்குள் இடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டது.
இந்த மோதல் பின்பு கலவரமாக உருவெடுத்தது. இதில் சக்திவேல், ராஜவேல் என்ற இரண்டு மீனவர்கள் மற்றும் மூன்று பெண்கள் படுகாயமடைந்தனர். மேலும், அப்பகுதியில் உள்ள சிலரது வீடுகளும் சூறையாடப்பட்டன.
கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கலவரத்தை கட்டுப்படுத்த வடக்குப் பிரிவு காவல்துறை கண்காணிப்பாளர் சிவதாசன் தலைமையில் ஆயுதம் ஏந்திய போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டனர். அவர்கள் தடியடி நடத்தியும், வானத்தை நோக்கி ஏழு முறை துப்பாக்கியால் சுட்டும் கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த கலவரத்திற்கு காரணமான வம்பா கீரப்பாளையத்தை சேர்ந்த 40 பேர் மீது ஒதியஞ்சாலை போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். மேலும் கலவரம் வெடிக்காமல் இருக்க துப்பாக்கி ஏந்திய போலீசார் அங்கு காவலுக்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.