For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பாக். அணு ஆயுதங்களை யுஎஸ்சுக்கு எதிராக பயன்படுத்துவோம்: அல்-கொய்தா

By Staff
Google Oneindia Tamil News

Nuclear Weapon
துபாய்: எங்கள் கைக்கு பாகிஸ்தானின் அணு ஆயுதங்கள் கிடைத்தால் நிச்சயம் அதை அமெரிக்காவுக்கு எதிரான போரில் பயன்படுத்த தயங்க மாட்டோம் என்று அல் கொய்தா அமைப்பு மிரட்டியுள்ளது.

அல் கொய்தா ஆதரவுடன் பாகிஸ்தான் வட மேற்கு எல்லைப்புற மாகாணத்தில் அட்டகாசம் செய்து கொண்டிருக்கும் தலிபான்களை விரட்டியடிக்க கடுமையாக போராடிக் கொண்டுள்ளது பாகிஸ்தான்.

இந்த போரில் பாகிஸ்தான் உறுதியுடன் செயல்படவில்லை என்று அமெரிக்கா எரிச்சலுடன் உள்ளது. இருப்பினும் பாகிஸ்தான் ராணுவம், ஸ்வாத் பள்ளத்தாக்கிலிருந்து தலிபான்களை விரட்டியடிக்க கடுமையாக போரிட்டுக்கொண்டுதான் உள்ளது.

இந்த நிலையில் அல் கொய்தா மற்றும் தலிபான்களின் கையை நோக்கி பாகிஸ்தானின் அணு ஆயுதங்கள் மெல்ல மெல்ல நெருங்கிக் கொண்டிருப்பதாக பரபரப்புத் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இது உண்மைதான் என்பதை நிரூபிப்பது போல பேசியுள்ளார் அல் கொய்தாவைச் சேர்ந்த முக்கியத் தலைவர்களில் ஒருவரான முஸ்தபா அபு அல் யாசித்.

இவர் ஆப்கானிஸ்தானிலிருந்தபடி செயல்பட்டு வருகிறார். அல்ஜசீரா டிவிக்கு இதுகுறித்து யாசித் அளித்துள்ள பேட்டியில், கடவுள் விருப்பப்பட்டால், அமெரிக்காவின் கைக்கு பாகிஸ்தானின் ஆணு ஆயுதங்கள் போகாது. மாறாக எங்களிடம் வந்து சேரும். அப்படிக் கிடைத்தால் நிச்சயம் நாங்கள் அதை அமெரிக்காவுக்குக்கும், அமெரிக்கர்களுக்கும் எதிராக பயன்படுத்துவோம்.

ஸ்வாத் போரில் நிச்சயம் பாகிஸ்தான் ராணுவம் தோல்வியைத் தழுவும். அது அவர்களுக்கு இறுதியான, உறுதியான தோல்வியாக அமையும்.

கடந்த காலங்களைப் போலவே தற்போதும், வருங்காலத்திலும் அல் கொய்தாவின் திட்டமிடல்கள் இருக்கும். அமெரிக்கா என்கிற நச்சுப் பாம்பின் தலையை நசுக்குவதும், சர்வாதிகாரத்தின் தலையை நசக்குவதும்தான் எங்களது ஒரே லட்சியம்.

ஆயுத ரீதியாக எங்களைப் பலப்படுத்திக் கொண்டு, இஸ்லாம் மற்றும் இஸ்லாமியர்களின் நலனைக் கருத்தில் கொண்டு நாங்கள் எங்களது சாதனைப் பயணத்தைத் தொடருவோம்.

சவூதி அரேபியாவில் எங்களது இயக்கத்தின் கொள்கைகளை பிரபலப்படுத்துவதற்காக அபு பாசிர் அல் வஹாயசி என்பவரை நியமித்துள்ளோம். (இந்த வஹாயசி மிகப் பெரிய எண்ணை ஏற்றுமதியாளர் ஆவார்).

முஸ்லீம்களைத் தாக்கிக் கொண்டு, முஸ்லீம்களின் எண்ணை வளத்தை சுரண்டிக் கொண்டிருக்கிறது அமெரிக்கா. எங்களது ஒரே எதிரி அமெரிக்காதான். அந்த எதிரிக்கு எதிராக மிகப் பெரிய அளவிலான நடவடிக்கைகளை நாங்கள் தொடர்ந்து மேற்கொள்வோம்.

இதுபோன்ற நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ளுமாறு அல் கொய்தா அமைப்பின் அனைத்துக் கிளைகளையும் நாங்கள் கேட்டுக் கொண்டுள்ளோம்.

முஸ்லீம் நாடுகளில் குவித்து வைத்துள்ள படைகளை அமெரிக்கா விலக்கினால், இஸ்ரேலுக்கான தனது ஆதரவை முழுமையாக விலக்கிக் கொண்டால், முஸ்லீம் நாடுகளுக்கு ஆதரவாக அது மாறினால், பத்து வருடங்களுக்கு நாங்கள் போர் நிறுத்தம் செய்யத் தயார்.

கடவுள் சித்தத்தால் ஒசாமா பின்லேடன், அய்மான் அல் ஜவாஹிரி ஆகியோர் பாதுகாப்பாக உள்ளனர். எதிரிகளால் அடைய முடியாத தூரத்தி்ல் அவர்கள் உள்ளனர். ஆனால் அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்பதை சொல்ல முடியாது. எங்களுக்கும் கூட அவர்கள் இருக்கும் இடம் தெரியாது. இருப்பினும் அவர்களுடன் எங்களுக்கு தொடர்ந்து தொடர்புகள் உள்ளன என்றார் அவர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X