சம்பளம் 'கட்'...ஊழியர் ஸ்ட்ரைக்: தடுமாறும் ஏர் இந்தியா!
அரசுத் துறைக்குச் சொந்தமான ஏர் இந்தியா நிறுவனம் இப்போது கடுமையான நிதி நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது. கடந்த மாதத்துக்கான சம்பளம் 15 நாட்கள் தாமதமாக அளிக்கப்படும் என ஏர் இந்தியா அறிவித்த போதே ஊழியர்கள் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர்.
இப்போது சம்பளத்தைக் கணிசமாகக் குறைப்போம் என நிர்வாகம் அறிவித்துள்ளதால் மேலும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.
ஏர் இந்தியாவில் 31000 பணியாளர்கள் உள்ளனர். இவர்களுக்குச் சம்பளமாக ஆண்டுக்கு ரூ.3100 கோடி செலவாகிறது.
இப்போது இதில் ரூ.500 கோடி வரை குறைக்க ஏர் இந்தியா முடிவு செய்து, அதை அறிவித்தும் உள்ளது. பிரதமர் அலுவலகத்தில் கலந்தாலோசித்த பிறகே இந்த முடிவு அறிவிக்கப்பட்டது.
இதனால் கடும் அதிருப்தி அடைந்துள்ள ஊழியர்கள், வரும் ஜூலை 1-ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் இறங்கும் முடிவில் உள்ளனர்.
ஆனாலும் ஜூன் 30-ம் தேதி வரை, அரசின் பதிலுக்காகக் காத்திருப்பதாக அறிவித்துள்ளர்.
ஒரு காலத்தில் கொடிகட்டிப் பறந்த ஏர் இந்தியா நிறுவனம், தனியார் துறை விமான நிறுவனங்களால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. "ஒரு நாளைக்கு ரூ.15 கோடி நஷ்டத்தில் இந்த நிறுவனம் இப்போது இயங்கக் காரணம், நல்ல லாபத்தில் ஏர் இந்தியா விமானங்களை இயக்கிவந்த வழித்தடங்களின் தனியார் நிறுவனங்களை அனுமதித்ததே. இன்றைக்கு பல வழித்தடங்களில் ஏர் இந்தியா இல்லாமலே போய்விட்டது. கொஞ்சம் கொஞ்சமாக அந்த நிறுவனத்தின் கழுத்தை நெறித்தது இந்திய அரசியல்வாதிகளும், ஆட்சியாளர்களும்தான்... ஒரு விதத்தில் தெரிந்தே செய்யப்படும் கொலை இது" என்கிறார் பிரபல டிராவல் ஏஜென்ஸியைச் சேர்ந்த நிர்வாகி ஒருவர்.
ஏர் இந்தியா ஊழியர்களின் சம்பள பிரச்சினை, நிறுவனம் சந்தித்து வரும் நஷ்டம் போன்றவற்றை ஆராய விரைவில் 4 பேர் கொண்ட கமிட்டி அமைக்கப்படும் என்றும், விரைவில் அமைச்சரவை கூடி இதுகுறித்து விவாதித்து இறுதி முடிவை எடுக்கும் என்றும், அதுவரை ஊழியர்கள் பொறுத்திருக்குமாறும் நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.
ஏர் இந்தியாவின் இந்த நிச்சயமற்ற தன்மையால், பயணிகள் டிக்கெட் புக்கிங் வெகுவாகக் குறைந்துள்ளது. இதனால் தனியார் விமான நிறுவனங்களின் காட்டில் செம வசூல் மழை!