புதுச்சேரி ராஜ்யசபா எம்பி சீட்: காங்-திமுக மோதல்
புதுச்சேரியில் ஒரே ஒரு ராஜ்யசபா சீட் உள்ளது. ராஜ்யசபா எம்பியாக இருந்த மத்திய அமைச்சரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான நாராயணசாமி சமீபத்திய மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வென்றார். இதனால் இந்த இடம் காலியானது.
இந்த இடத்தை காங்கிரஸ் தனக்கே வைத்துக் கொள்ள திட்டமிட்டுள்ள நிலையில் அதை திமுக தங்களுக்குத் தர வேண்டும் என்று கோரியுள்ளது.
இன்று புதுச்சேரி திமுக அமைப்பாளர் ஜானகிராமன் தலைமையில் நடந்த அக் கட்சியின் மாநிலக் குழுக் கூட்டத்தில், புதுச்சேரியில் காலியாக உள்ள ராஜ்யசபா சீட்டை திமுகவுக்கு ஒதுக்க வேண்டும் என்று கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் இது தொடர்பாக முதல்வர் கருணாநிதியை சந்தித்து வலியுறுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த இடத்தை வெல்ல திமுகவும் காங்கிரஸும் இணைந்து போட்டியிட்டால் தான் முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. அங்கு காங்கிரஸ் ஆட்சிக்கு திமுக வெளியில் இருந்து ஆதரவு தந்து வருகிறது. இந்த ஆதரவில் தான் ஆட்சி நடக்கிறது.
மத்தியில் தாங்கள் கேட்ட அமைச்சரவை இடங்களைத் தராதது, கேட்ட இலாக்காக்களைத் தராதது, தமிழகததில் ஆட்சியில் பங்கு கேட்டு தொல்லை தருவது என்று காங்கிரஸ் தொடர்ந்து தங்களை எரிச்சலூட்டி வருவதற்கு பதிலடியாகவே புதுச்சேரி எம்பி தொகுதியைக் கேட்டு திமுக 'செக்' வைப்பதாகத் தெரிகிறது.
இதனால் இரு கட்சிகள் இடையே மோதல் வெடிக்கும் சூழல் உருவாகியுள்ளது. இதற்கிடையே புதுச்சேரியில் காங்கிரஸ் அரசுக்கு ஆதரவு கொடுத்து வரும் கண்ணனின் புதுச்சேரி முன்னேற்ற காங்கிரஸ் கட்சி, காங்கிரஸ் எடுக்கும் முடிவுக்குக் கட்டுப்படுவதாக அறிவித்துள்ளது.