ஈரானிலிருந்து தூதரக அதிகாரிகளின் குடும்பத்தாரை திரும்ப அழைக்கும் இங்கி.
டெஹ்ரான்: ஈரானில் நிலைமை மோசமடைந்து வருவதால் தங்கள் நாட்டு தூதரக அதிகாரிகளின் குடும்பத்தினர் உடனடியாக அங்கிருந்து வெளியேறி இங்கிலாந்து திரும்புமாறு உத்தரவிட்டுள்ளது.
சமீபத்தில் நடந்த தேர்தலில் ஈரானில் மகமூத் அகமதிநிஜாத் மீண்டும் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், தேர்தலில் மோசடி நடந்ததாக கூறி எதிர்கட்சி வேட்பாளர் மெளசவியின் ஆதரவாளர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர்.
அவர்கள் பாதுகாப்பு படையினருடன் கடும் மோதலில் இறங்கினர். இந்த சம்பவத்தில் இதுவரை 17 கலவரக்காரர்கள் சுட்டு கொல்லப்பட்டனர்.
இந்நிலையில் மேற்கத்திய நாடுகள் தான் தங்கள் உள்நாட்டு பிரச்சினையில் தலையிடுகின்றன. இங்கிலாந்து தனது உளவு துறை மூலம் நாட்டில் அமைதியை குலைக்க பார்க்கிறது என அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் மனாவ்ச்சர் மொடாகி குற்றம்சாட்டியுள்ளார்.
அதே நேரத்தில் ஈரான் நாட்டு மத குரு அயோதொல்லா அலி கர்மேனே, ஈரான் விவகாரத்தி்ல் மூக்கை நுழைப்பதில் இங்கிலாந்தை விட மோசமான நாட்டை உதாரணம் காட்ட முடியாது என ஆவேசமாக கூறியுள்ளார். இவர்களின் குற்றச்சாட்டை இங்கிலாந்து வெளியுறவு துறை அமைச்சர் டேவிட் மிலிபாந்த் மறுத்துவிட்டார்.
இது குறித்து இங்கிலாந்து வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், ஈரானில் கலவரம் ஓய்ந்த பாடில்லை. இங்கிருக்கும் இங்கிலாந்து மக்களால் சுதந்திரமாக வெளியில் நடமாட முடியவில்லை. இதனால் தூதரக அதிகாரிகளி்ன் குடும்பத்தினரை திருபம் வருமாறு கூறியுள்ளோம் என்றர்.