எம்பிபிஎஸ் நன்கொடை: சேலம் பல்கலையில் சோதனை
சென்னை: எம்பிபிஎஸ் படிப்பில் மாணவியைச் சேர்க்க ரூ.20 லட்சம் நன்கொடை கேட்ட புகாரின் அடிப்படையில் சேலம் தனியார் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் சோதனை நடந்தது.
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகும் முன்பே சேலத்தைச் சேர்ந்த மாணவி தனது பெற்றோருடன் அங்குள்ள தனியார் மருத்துவப் பல்கலைக்கழகத்துக்குச் சென்றனர்.
அப்போது அந்தப் பல்கலைக்கழகம், மாணவி எவ்வளவு மதிப்பெண் வாங்கினாலும் பரவாயில்லை. ரூ. 20 லட்சம் தந்தால் எம்பி.பி.எஸ் சீட் உண்டு. கல்விக் கட்டணமாக கூடுதலாக ரூ. 3 லட்சம் மட்டும் கட்டினால் போதும் என்று கூறியதாக மருத்துவக் கல்வி இயக்குனர் டாக்டர் விநாயகத்திடம் மாணவியின் பெற்றோர் கூறினர்.
இதையடுத்து சென்னை மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் மோகனசுந்தரம், மருத்துவக் கல்வி துணை இயக்குனர் டாக்டர் கீதா ஆகியோரை சேலம் தனியார் பல்கலைக்கழகத்தில் சோதனை நடத்த விநாயகம் அனுப்பினார்.
அவர்கள் அந்தப் பல்கலைக்கழகத்தின் மாணவர் சேர்க்கை ஆவணங்களை சோதனையிட்டனர். மாணவியின் பெற்றோரிடமும் இந்தக் குழுவினர் விசாரணை நடத்தினர்.
இரண்டு நாட்களில் இந்தக் குழு அறிக்கை அளிக்கும். அதன் பின்னர் நடவடிக்கை குறித்து முடிவு எடுக்கப்படும் என்று விநாயகம் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications