மின் ரயிலை கடத்திய நபர் அடையாளம் தெரிந்தது
கடந்த ஏப்ரல் மாதம் 29ம் தேதி மூர் மார்க்கெட் ரயி்ல் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த மின்சார ரயிலை கடத்திய நபர் அதிவேகத்தில் ஓட்டிச் சென்று வியாசர்பாடி ஜீவா ரயில் நிலையத்தில் நின்றிருந்த சரக்கு ரயில் மீது மோதினார்.
இதில் 7 பயணிகள் பலியாயினர். ரயிலை கடத்திச் சென்ற நபரும் பலியானார்.
இது குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். ரயிலைக் கடத்திய மர்ம மனிதனின் உடல் மட்டுமே போலீசாருக்கு துருப்பு சீட்டாக இருந்தது.
இதை வைத்தே சிபிசிஐடி போலீசார் துப்பு துலக்கினர். அவரது கையில் தெலுங்கில் நாகராஜ் என்று பச்சைக் குத்தப்பட்டிருப்பதை வைத்து அவர் ஆந்திராவை சேர்ந்தவர் என்று கண்டு பிடித்தனர்.
இதையடுத்து கடந்த 75 நாட்களாக பல தனிப்படையினர் ஆந்திராவில் விசாரணை நடத்தி வந்தனர். இந் நிலையில் ரயிலைக் கடத்திது நெல்லூர் மாவட்டத்தில் உள்ள தடாவைச் சேர்ந்த நாகராஜ் என்று தெரியவந்தது.
இவரது தந்தை ரயில்வேயில் டிரைவராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார். இவரது மனைவி ரூபாவதி, இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
இதையடுத்து ரூபாவதியை சென்னைக்கு அழைத்து வந்த சிபிசிஐடி போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். அவரிடம் நாகராஜின் உடலைக் காட்டியபோது, அவர் தனது கணவர் தான் என்று அவர் அடையாளம் காட்டினார்.
மேலும் அவர் சில காலமாக மனநலம் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
நாகராஜ் தனது தந்தையுடன் ரயில் என்ஜினில் பயணம் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்ததாகவும், இதனால் அவருக்கும் ரயில் ஓட்டுவது குறித்தும், ரயில் சாவிகளை கையாளும் நி்ர்வாக நடைமுறைகளும் தெரியும் என்றும் ரூபாவதி கூறியுள்ளார்.
அந்த நபர் நாகராஜ் தானா என்பதை உறுதி செய்ய அவரது தாயார் மற்றும் மகள்களின் ரத்த மாதிரிகள் எடு்க்கப்பட்டு சென்னையில் டி.என்.ஏ. மேட்சிங் சோதனை நடந்து வருகிறது.