யுஎஸ் ஏவுகணை தாக்குதல்-பாகிஸ்தானில் 90 பேர் பலி
அமெரிக்காவில் உலக வர்த்தக மையத்தில் நடந்த தாக்குதலை அடுத்து அந்நாடு அல் கொய்தா மற்றும் தாலிபான் தீவிரவாதிகளை முற்றிலுமாக ஒழிக்க முயற்சித்து வருகிறது.
இதையடுத்து ஆப்கானிஸ்தானில் தீவிர வேட்டையடியது. அங்கிருந்து தப்பிய தாலிபான், அல் கொய்தா தீவிரவாதிகள் தற்போது பாகிஸ்தானில் வட மேற்கு எல்லைப்புற பகுதியில் பதுங்கியுள்ளனர். அப்பகுதியில் உள்ள வசிர்ஸ்தானில் தான் தாலிபானின் முக்கிய தலைவரான பைதுல்லா மெக்சுத் மற்றும் கோரி ஹீசைன் ஆகியோர் இருப்பதாக அமெரிக்கா சந்தேகப்படுகிறது.
நேற்று காலை தாலிபானின் பயிற்சி மையம் அமைந்துள்ள மகீன் என்ப பகுதியில் அமெரிக்காவின் ஆளில்லாத உளவு விமானம் தாக்குதல் நடத்தியது. இதில் தாலிபான் தளபதி சங்கீன் கான் உள்ளிட்ட ஆறு தீவிரவாதிகள் பலியானதாக தெரிகிறது.
முக்கிய தளபதி மரணமடைந்ததை அடுத்து அப்பகுதியில் மாலை 3 மணிக்கு நடக்கும் இறுதிசடங்கில் பைதுல்லா மெக்சுத் கலந்து கொள்வார் என்றும் அமெரிக்க ராணுவத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது. ஆனால் இத்தகவலை யாரும் உறுதிசெய்யவில்லை.
இதையடுத்து அமெரிக்க ராணுவம் அப்பகுதியில் மூன்று முறை ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில் சுமார் 84க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி இருப்பதாக தெரிகிறது. இவர்களில் 50க்கும் மேற்பட்டவர்கள் தாலிபான் தீவிரவாதிகள் எனவும் கூறப்படுகிறது.