வரதட்சணை-திருமணத்துக்கு முதல் நாள் பெண் தற்கொலை
சென்னை: மாப்பிள்ளை வீட்டார் திடீரென கூடுதல் வரதட்சணை பணம் கேட்டதால் கவலை அடைந்த மணமகள் கல்யாணத்திற்கு முதல் நாளன்று தற்கொலை செய்து கொண்டார்.
சென்னையை அடுத்த கொட்டி வாக்கத்தைச் சேர்ந்தவர் குமார். இவரது 2வது மகள் சித்ரா. சில ஆண்டுகளுக்கு முன்பு சித்ரா பத்தாவது வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது அவரது ஆசிரியர் மோகனுக்கும், அவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது.
இருவரும் நெருங்கிப் பழகத் தொடங்கினர். இதைப் பார்த்த சித்ராவின் பெற்றோர் இருவருக்கும் கல்யாணம் செய்ய தீர்மானித்தனர். மோகனின் குடும்பத்தினரும் இதற்கு சம்மதம் தெரிவித்தனர்.
இந்த நிலையில், குமார் திடீரென உடல் நலக்குறைவால் இறந்து போனார். மோகனுக்கும் அரசு பள்ளியில் வேலை கிடைத்தது. மோகனைப் போல ஆசிரியையாக வேண்டும் என்று விரும்பி பி.எட் படித்து வந்த சித்ராவும் படிப்பை முடித்தார்.
இந்த நிலையில் இவர்கள் இருவரின் திருமணமும் இன்று நடப்பதாக இருந்தது. இந்த நிலையி்ல் நேற்று திடீரென சித்ரா தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
தகவல் அறிந்ததும் போலீஸார் விரைந்து வந்தனர். அவர்களிடம் சித்ராவின் தாயார் சுந்தரி புகார் கொடுத்தார். அதில், அரசு பள்ளிக்கூடத்தில் ஆசிரியர் பணியில் மோகன் சேர்ந்த பின், கூடுதலாக பணம் கேட்டு தொல்லை கொடுத்ததால், எனது மகள் தற்கொலை செய்து இருக்கலாம் என்று கூறியுள்ளார். இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.