காங்.க்கு தமிழகத்தை ஆளும் தகுதி உண்டு-தங்கபாலு
சென்னை: தமிழகத்தில் தனித்து ஆட்சி செய்யும் தகுதி காங்கிரஸ் கட்சிக்கு உள்ளது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் தங்கபாலு கூறினார்.
சத்தியமூர்த்தி பவனில் இன்று உறுப்பினர் சேர்ப்பு இயக்கத்தை தொடங்கி வைத்து அவர் நிருபர்களிடம் பேசுகையி்ல்,
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் உறுப்பினர் சேர்ப்பு இயக்கம் இன்று துவக்கப்பட்டுள்ளது. ஒரு உறுப்பினர் 25 உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். 3 மாதத்தில் 50 லட்சம் உறுப்பினர்கள் சேர்ப்பதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
புதிய உறுப்பினர் சேர்க்கை முடிந்தவுடன் சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக உட்கட்சி தேர்தல் நடைபெறும். உட்கட்சி தேர்தலுக்கான அட்டவணையை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அறிவிக்கும். இந்தத் தேர்தலில் இளைஞர்கள், பெண்கள், தாழ்த்தப்பட்டோர், சிறுபான்மையினர் ஆகியோருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
இளைஞர்கள் அதிக அளவில் ஈர்க்கப்படுவார்கள். உட்கட்சி தேர்தலில் அனைத்து தலைவர்களும் ஓரணியில் நின்று, 1996ல் எப்படி தேர்தல் நடத்தினோமோ அதன் அடிப்படையில் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்தப்படும்.
ராகுல் காந்தி தனக்கு வந்த அமைச்சர் பதவியை உதறி விட்டு கட்சியை பலப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி ஏற்கனவே ஆட்சி செய்துள்ளது. எங்களுக்கு ஆட்சி செய்யும் தகுதி உள்ளது. தனித்து ஆட்சி செய்ய வேண்டும் என்பதுதான் தொண்டர்களின் விருப்பம். எங்களுடைய லட்சியமும் அதுதான். இந்த இலக்கை நோக்கித்தான் இனி எங்களின் பயணம் தொடரும்.
கச்சத் தீவு சர்வதேச பிரச்சனை என்பதால் மத்திய அரசு எடுக்கும் நிலைதான் தமிழக காங்கிரசின் நிலையாகும். பாலாற்றின் குறுக்கே அணை கட்ட ஆந்திர அரசுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக வந்துள்ள செய்திகள் தவறு. அப்படி எந்த அனுமதியும் தரப்படவில்லை என்று மத்திய வனத்துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் என்னிடம் தொலைபேசியில் தெரிவித்தார்.
என்.எல்.சி. பங்கு விற்பனை விவகாரத்தில் காங்கிரஸ் தலைமையின் முடிவுக்குக் கட்டுப்படுவோம் என்றார் தஙகபாலு.












Click it and Unblock the Notifications