வெயில்-டெல்லி பள்ளிகளுக்கு விடுமுறை, மும்பையில் கனமழை
டெல்லி: டெல்லியில் கடும் வெயில் அடித்து வருவதால் ஜூலை 8ம் தேதி வரை பள்ளிக்கூடங்களை மூட டெல்லி மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
டெல்லியில் கடும் வெயில் கொளுத்துகிறது. இதனால் நகர் முழுவதும் அனலாக உள்ளது. மழை வருவதற்கான வாய்ப்புகளையும் காணோம். இதையடுத்து அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிக்கூடங்களையும் ஜூலை 8ம் தேதி வரை மூட டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது.
கோடை விடுமுறைக்குப் பின்னர் பெரும்பாலான டெல்லி பள்ளிகள் ஜூலை 1ம் தேதியன்று திறக்கப்படுவதாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
பெற்றோர்களிடமிருந்து வந்த கோரிக்கைகளை ஏற்று இந்த முடிவை அரசு எடுத்துள்ளதாக அரசு உத்தரவு கூறுகிறது.
திடீரென கன மழை-மும்பை ஸ்தம்பிப்பு:
இந் நிலையில் மும்பை நகரில் இன்று பெய்த திடீர் கன மழையால் நகரம் ஸ்தம்பித்தது. போக்குவரத்து பல இடங்களில் பாதிக்கப்பட்டது.
பல தாழ்வான பகுதிகளில் தண்ணீர் வெள்ளம் போல ஓடுகிறது. மத்திய மும்பையில் உள்ள பைகுல்லா, பரேல், மகாலஷ்மி, மாஹிம், கோரேகான், மிலன் சுரங்கப் பாதைகளில் வெள்ளம் தேங்கியுள்ளது. மேற்கு புறநகர்ப் பகுதிகளிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
பாந்துப், குர்லா, முலுந்த் ஆகிய பகுதிகளிலும் கன மழை பெய்ததால் அங்கும் வெள்ளக்காடாகியுள்ளது.
நகரின் பெரும்பாலான பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விலே பார்லே பகுதியில் தேங்கிய நீரில் செல்ல முயன்ற ஒரு மினி டாங்கர் லாரி கவிழ்ந்து போனது.