நிருபர் மீது தாக்குதல் - துரித நடவடிக்கை எடுத்த முதல்வர், துணை முதல்வருக்கு பத்திரிகையாளர்கள் பாராட்
கரூர்: ராமநாதபுரம் மாவட்ட தமிழக அரசியல் வார இதழின் மாவட்ட நிருபர் கிஷோர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட வழக்கில், துரித நடவடிக்கை எடுத்த முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு கரூர் பத்திரிகையாளர்கள் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்படுள்ளது.
ராமநாதபுர மாவட்ட தமிழக அரசியல் என்ற வார இதழின் மாவட்ட நிருபர் கிஷோர் என்கிற ரவிச்சந்திரன் ராமநாதபுரம் நகர திமுக செயலாளர் ரத்னம் மற்றும் சிலரால் காரில் கடத்தப்பட்டுள்ளார். மேலும் நிருபர் கிஷோரை கடுமையாக தாக்கியுள்ளனர்.
இந்த செயலுக்கு சென்னை பிரஸ் கிளப், கரூர் மாவட்ட பத்திரிகையாளர்கள் மற்றும் பல்வேறு மாவட்டத்தைச் சேர்ந்த பத்திரிக்கையாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
நிருபர் கிஷோருக்கு உரிய பாதுகாப்பு வழங்க காவல் துறையினரிடம் ஏற்கனவே மனு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது தமிழக முதல்வர் கருணாநிதி பாராபட்சம் பாரமல் கடும் நடவடிக்கை எடுக்க முன் வர வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தனர்.
இந்த நிலையில், ராமநாதபுரம் தி.மு.க., நகரச் செயலர் ரத்தினம் பிடியில் இருந்த நிருபர் கிஷோர் முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் ஸ்டாலினின் நடவடிக்கையின் பேரில் விடுவிக்கப்படடுள்ளார். மேலும் நகரச் செயலர் ரத்தினம் தி.மு.க.,விலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக தி.மு.க. பொதுச் செயலர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ராமநாதபுரம் நகர தி.மு.க., செயலர் ஆர்.ஜி.ரத்தினம், கட்சிக் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப் பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வருவதால் தி.மு.க., உறுப்பினர் உட்பட கட்சியின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார் எனக் கூறியுள்ளார்.
பத்தரிக்கையாளர்களின் உணர்வுகளை அறிந்து புரிந்து தக்க தருணத்தில் நேர்மைக்கு துணை நின்று நிருபர் கிஷோரை உயிருடன் மீட்ட தமிழக துணை முதல்வர் மு.க. ஸ்டாலின், ரத்தினம் மீது உடனே நடவடிக்கை எடுத்த தமிழக முதல்வர் கருணாநிதி அவர்களுக்கு பாராட்டு மற்றும் நன்றியை தெரிவித்துக் கொள்வதாக கரூர் மாவட்ட பத்திரிகையாளர்கள் கூறியுள்ளனர்.