மைக்கேல் ஜாக்சனின் உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு
லாஸ் ஏஞ்சலெஸ்: பாப் மன்னன் மைக்கேல் ஜாக்சனின் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
ஜாக்சனின் திடீர் மறைவு பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. மேலும் அட்டாப்சி உள்ளிட்ட பல்வேறு சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன.
இந்த சோதனைகளின் முடிவுகள் இதுவரை வெளியிடப்படவில்லை. மூன்று அல்லது நான்கு வாரங்கள் கழித்தே முடிவுகள் தெரிய வரும் எனத் தெரிகிறது.
இந்த நிலையில், சோதனைகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து ஜாக்சனின் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதுகுறித்து லாஸ் ஏஞ்சலெஸ் கவுன்டி உதவி தலைமை தடயவியல் அதிகாரி எட் வின்டர் கூறுகையில், ஜாக்சனின் உடல் எங்களது அலுவலகத்திலிருந்து அகற்றப்பட்டு விட்டது. அவரது குடும்பத்தினரின் கோரிக்கைப்படி அவரது உடல் பெயர் சொல்லப்படாத இடம் ஒன்றுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
பாதுகாப்பு கருதி அந்த இடத்தின் பெயரை நாங்கள் சொல்ல முடியாத நிலையில் இருக்கிறோம் என்றார் அவர்.
தலைமறைவான டாக்டர் கண்டுபிடிப்பு..
இதற்கிடையே, ஜாக்சனை தொடர்ந்து அருகில் இருந்து கவனித்துக் கொண்டவரும், ஜாக்சனுக்கு மாரடைப்பு ஏற்பட்டபோது உடன் இருந்தவருமான டாக்டர் தலைமறைவாகி விட்டதாக முதலில் கூறப்பட்டது.
அவரை போலீஸார் தேடி வந்தனர். இந்த நிலையில் அந்த டாக்டர் தற்போது போலீஸ் வசம் வந்துள்ளார்.
ஜாக்சனுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கு முன்பு ஒரு ஊசியை அந்த டாக்டர் போட்டதாகவும், அதைத் தொடர்ந்து அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும் டிஎம்எஸ் என்ற இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
இதையடுத்து அந்த டாக்டரை போலீஸார் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் அந்த டாக்டரின் இருப்பிடத்தை போலீஸார் கண்டுபிடித்து அவரை அழைத்துச் சென்று விசாரித்து வருகின்றனர்.
அவர் என்ன ஊசி போட்டார், ஓவர் டோஸ் மருந்தைக் கொடுத்து விட்டாரா என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications