ஏர் பிரான்ஸ் விபத்தில் இறந்தோரின் உடல்களைத் தேடும் பணி முடிந்தது
ரியோ டி ஜெனீரோ: அட்லான்டிக் கடலில் விழுந்து விபத்துக்குள்ளான ஏர் பிரான்ஸ் விமானத்தில் பயணித்தவர்களின் உடல்களைத் தேடும் பணியை முடித்துக் கொள்வதாக பிரேசில் ராணுவம் தெரிவித்துள்ளது.
ஜூன் 1ம் தேதி விமான விபத்து நடந்துத. அதன் பின்னர் கடந்த ஒரு மாத காலமாக உடல்களைத் தேடும் பணி முழு வீச்சில் நடந்து வந்தது. மொத்தம் 228 பேர் விபத்தில் இறந்தனர். இருப்பினும் 51 உடல்கள் மட்டுமே இதுவரை கிடைத்துள்ளது. அவற்றிலும் 11 பேரின் உடல்கள் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளது.
இதுகுறித்து பிரேசில் ராணுவ செய்தித் தொடர்பாளர் ஹென்றி முனோஸ் கூறுகையில், இனியும் உடல்கள் கிடைக்கும் என்பது சந்தேகம்தான். எனவே இதைத் தொடருவதை நிறுத்த முடிவு செய்துள்ளோம் என்றார்.
இருப்பினும் கருப்புப் பெட்டியைத் தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. ஜூலை 1ம் தேதி வரைதான் கருப்புப் பெட்டியிலிருந்து சமிக்ஞைகள் வெளி வரும். அதற்குள் கருப்பு்ப பெட்டியை மீட்க பிரான்ஸ் குழுவினர் முயன்று வருகின்றனர்.
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஏராளமான கப்பல்கள், அணு சக்தி நீர்மூழ்கிக் கப்பல் ஆகியவை கருப்புப் பெட்டியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.
இந்த நிலையில் விபத்து குறித்த விசாரணையின் முதல் அறிக்கை ஜூலை 2ம் தேதி பிரான்ஸ் நாட்டில் வெளியிடப்படவுள்ளது.