For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திமுக பஞ்சாயத்துத் தலைவர் குண்டுவீசி, வெட்டிக் கொலை

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: காஞ்சிபுரம் மாவட்டம் ஊரப்பாக்கம் பஞ்சாயத்துத் தலைவர் குமார் வெடிகுண்டு வீசிக் கொல்லப்பட்டார்.

சென்னை வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தை சேர்ந்தவர் ஜி.என்.ஆர்.குமார் (47). ஊரப்பாக்கம் ஊராட்சி தலைவராகவும், திமுக இளைஞரணி மாவட்ட துணை அமைப்பாளராகவும் பதவி வகித்தார்.

தினமும் காலையில் ஊராட்சி பகுதிகளை சுற்றிப் பார்த்து மக்கள் குறைகளை கேட்டறிவார். வீட்டில் இருந்து நேற்று காரில் புறப்பட்டுள்ளார். டிரைவர் பாபு ஓட்டிச் சென்றார்.

சென்னை - செங்கல்பட்டு தேசிய நெடுஞ்சாலையில் காரணை புதுச்சேரி சந்திப்பில் உள்ள ஒரு டீக்கடை அருகே காரை நிறுத்தி, டீ வாங்கி வரும்படி கூறியுள்ளார். டிரைவர் பாபு டீக்கடைக்கு சென்றார்.

அப்போது காரணை புதுச்சேரி ஊராட்சி முன்னாள் தலைவர் டில்லிபாபு அங்கு வந்தார். காருக்கு வெளியில் நின்றபடியே, குமாருடன் பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது, குமாரின் காருக்கு சற்று தூரத்தில் பச்சை நிற ஸ்கார்பியோ கார் வந்து நின்றது. அதில் இருந்து லுங்கி அணிந்திருந்த 7 பேர் திபுதிபுவென கீழே இறங்கினர். பின்னர் தாங்கள் வைத்திருந்த 4 கையெறி குண்டுகளை, குமார் கார் மீது வீசினர். அவை வெடித்துச் சிதறியதில் கார் சேதம் அடைந்தது.

இதைப் பார்த்து டில்லி பாபு ஓடினார். காரிலிருந்த குமாரும் இறங்கி ஓடினார். ஆனால் அவரைத் துரத்தி வந்த கார் கும்பல், குமாரை வளைத்துப் பிடித்து சரமாரியாக வெட்டித் தள்ளியது.

இதில் தேசிய நெடுஞ்சாலையின் நடுவே ரத்த வெள்ளத்தில் பிணமானார் குமார்.

இதனால் சாலையில் பதட்டம் ஏற்பட்டது. வாகனங்கள் அப்படியே நிறுத்தப்பட்டன. இதைப் பயன்படுத்தி கொலை கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டது.

மாவட்ட எஸ்.பி. பிரேம் சின்ஹா தலைமையில் போலீஸார் விரைந்து வந்தனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸார் குவிக்கப்பட்டனர்.

கொல்லப்பட்ட குமாருக்கு மீராபாய் (40) என்ற மனைவியும் கபில், பாலாஜி என்ற மகன்களும், 2 மகள்களும் உள்ளனர்.

2 கொலை வழக்குகளில் முக்கிய குற்றவாளி...

கொல்லப்பட்ட குமார் 2 முக்கிய கொலை வழக்குகளில் தொடர்புடையவர்.

2001ம் ஊரப்பாக்கம் ஊராட்சி தலைவியாக இருந்த மேனகா, ஊராட்சி அலுவலகத்திலேயே வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதில் குமார் ஒரு குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.

கடந்த ஆண்டு காட்டாங்கொளத்தூர் ஒன்றிய தேமுதிக தொண்டரணி அமைப்பாளர் பாலாஜி, கருர் வைஸ்யா வங்கி அருகில் படுகொலை செய்யப்பட்டார். இந்த படுகொலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கொலையைச் செய்ய உத்தரவிட்டவர் குமார்தான். எனவே அவரை உடனே கைது செய்ய வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் பகிரங்கமாக குற்றம் சாட்டியிருந்தார்.

இந்த 2 கொலை வழக்குகளில் குமார், குற்றவாளிகள் பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்தார். கைதாகி சிறையில் இருந்த அவர் ஜாமீனில் வெளியே வந்திருந்தார்.

குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழும் உள்ளே இருந்தவர். சில மாதங்களுக்கு முன்பு தூத்துக்குடியை பரபரப்பாக்கிய கள்ளத்துப்பாக்கி வாங்கிய வழக்கிலும் குமாருக்கு முக்கியத் தொடர்பு உள்ளது.

இப்படி பலத்த குற்றப் பின்னணியுடன் வலம் வந்த குமார் பழிக்குப் பழி வாங்கும் நோக்கில் கொல்லப்பட்டிருக்கலாம் என்று போலீஸார் கருதுகின்றனர்.

இறுதி ஊர்வலத்தில் போலீஸ் தடியடி, கல்வீச்சு...

இந்நிலையில் அவரது இறுதி ஊர்வலம் இன்று சுமார் காலை 11 மணிக்கு நடந்தது. சென்னை-திருச்சி மெயின் ரோடு வழியாக சுடுகாட்டுக்கு சென்ற ஊர்வல பாதுகாப்பு பணிக்காக போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

அப்போது ஊர்வலத்தில் சென்று கொண்டிருந்த சிலர் திடீரென மறியல் செய்தனர். இதையடுத்து போலீசார் தலையிட்டு அவர்களை சமாதானப்படுத்தினர். ஆனால், அதற்கு அவர்கள் மசியாத காரணத்தால் போலீசார் தடியடி நடத்தி, கூட்டத்தை கலைத்தனர்.

இதையடுத்து மறியல் செய்தவர்களில் சிலர் போலீசார் மீதும், பஸ்கள் மீதும் கல்வீசினர். இதனால் அங்கு பெரும் பதட்டம் நிலவியது. சுமார் ஒன்றரை மணி நேரத்துக்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X