மதுரை அருகே தங்கப் புதையல்- வருவாய்த்துறை அதிகாரிகளிடம் ஒப்படைப்பு
மதுரை: மதுரை அருகே பல நூறு ஆண்டுகளக்கு முந்தைய தங்க புதையல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அதில் இருந்த தங்க உத்திராட்சைகள், தங்கப் பட்டைகள் ஆகியவை வருவாய்த்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.
மதுரை சமயநல்லூர் அருகே உள்ளது தேனூர். வரலாற்றுச் சிறப்புமிக்க பழமையான இந்த ஊரில் சிவன் கோவில் ஒன்று உள்ளது. இதனை தற்போது குருசாமி மடம் என கிராம மக்கள் அழைத்து வருகின்றனர். இங்கு பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு சாமியார்கள் வந்து தங்கிச் சென்றதாக கூறப்படுகின்றது.
இந்த குரு சாமி மடத்திலிருந்து 400 மீட்டர் தொலைவில் தனியாருக்கு சொந்தமான இடத்திலிருந்த மரம் ஒன்று சமீபத்தில் வீசிய கடும் காற்று காரணமாக வேரோடு சாய்ந்து விழுந்தது.
இந்த நிலையில், இந்த மரத்தில் அப்பகுதியைச் சேர்ந்த சிறுவர்கள் சிலர் ஏறி விளையாடி கொண்டிருந்தனர். அப்போது, தேனூர் வடக்குத் தெருவைச் சேர்ந்த செல்வம்-மஞ்சுளா தம்பதியரின் குழந்தை அர்ஜூணன்(3) இந்த மரத்தில் விளையாடிக் கொண்டிருந்த போது வேர்களுக்கு ஊடே சிக்கியிருந்த மண் கலசம் ஒன்றை கண்டெடுத்தான்.
அந்த கலயத்தை பெற்றோரிடம் கொண்டு கொடுத்தான். அதை பார்த்த போது அதில் தங்கத்தினால் செய்யப்பட்ட உத்திராட்சைகள், தங்க பட்டைகள் இருந்தது தெரிய வந்தது. இந்த தகவல் காட்டுத் தீயாக பரவியது.
இதனையடுத்து, வருவாய்த்துறை அதிகாரிகள், காவல் துறையினருக்கு கிராம மக்கள் தகவல் கொடுத்தனர்.
அதன் பேரில் விரைந்து வந்த வருவாய்த்துறை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் பானையில் இருந்த தங்க பொருட்களை அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இது குறித்து தொல்பொருள் ஆய்வுத்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications