கடன்-வங்கி மானேஜரை உதைத்த காங். எம்பி
ஹைதராபாத்: தனது சிபாரிசு கடிதத்துக்கு கடன் கொடுக்காத வங்கி மானேஜர் ஒருவரை ஆந்திர எம்.பி ஒருவர் அடித்து உதைத்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாடாளுமன்ற தேர்தலில் ஆந்திர மாநிலம் நாகர் கர்னூல் தொகுதியில் இருந்து காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டவர் ஜெகன்நாத். தேர்தல் பிரச்சாரத்தின் போது ஜெகன்நாத் தனது பகுதி விவசாயிகள் மற்றும் சிறு வியாபாரிகளிக்கு வங்கியில் கடன் வாங்கி தருவதாக உறுதியளித்துள்ளார்.
இந்நிலையில் சமீபத்தில் விவசாயிகள், வியாபாரிகள் உள்ளிட்டேர் ஜெகன்நாத்தை சென்று சந்தித்து தங்களுக்கு கடன் வாங்கி கொடுக்குமாறு கேட்டுள்ளனர்.
அவர் அப்பகுதியில் உள்ள கிராமின் விகாஸ் வங்கிக்கு பரிந்துரை கடிதம் ஒன்று கொடுத்துள்ளார். ஆனால், அவரது பரிந்துரை கடிதத்துடன் மக்கள் கூட்டம் கூட்டமாக வருவதை பார்த்த வங்கி மானேஜர் ரவீந்தர் ரெட்டி கடன் கொடுக்க மறுத்துவிட்டார்.
இதை தொடர்ந்து அவர்கள் மீண்டும் எம்.பி.ஜெகன்நாத்தை சந்தித்து நடந்ததை கூறியுள்ளனர். இதையடுத்து ஆத்திரமடைந்த எம்.பி. நேரடியாக அந்த வங்கிக்கு சென்று தனது சிபாரிசு கடிதத்துக்கு கடன் கொடுக்க மறுத்த வங்கிக்கு சென்றார்.
நான் சொன்னவர்களுக்கு என் கடன் கொடுக்கவில்லை. இது என்ன உன் குடும்ப வங்கியா? என அவரை சட்டையை பிடித்து இழுத்து கீழே தள்ளியுள்ளார்.
பின்னர் மானேஜரை பொது மக்கள் முன்னிலையில் போட்டு அடித்து உதைத்துள்ளார். வலி தாங்காமல் மானேஜர் சத்தம் போட்டு அலறியுள்ளார். அப்போது ஜெகன்நாதன் எம்.பி.யின் ஆத்திரம் தீரவில்லை. அவரை தொடர்ந்து தாக்கியுள்ளார்.
நிலைமை மோசமாவதை உணர்ந்த எம்எல்ஏ ராமலு என்பவர் அந்த எம்.பி.யை அழைத்து கொண்டு வெளியேறினார். இது தொடர்பாக பிரதமரிடம் புகார் செய்ய போவதாக அடி வாங்கிய மானேஜர் தெரிவித்துள்ளார்.