புகையிலை எச்சரிக்கை படம் அமலாவதில் தாமதம்-அன்புமணி காட்டம்
சென்னை: சிகரெட் உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள் அடங்கிய பெட்டிகளில் எச்சரிக்கை படம் கட்டாயம் இடம் பெற வேண்டும் என்ற உத்தரவை அமல்படுத்த தாமதித்து வரும் மத்திய, மாநில அரசுகளின் மெத்தன போக்கை முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ் வன்மையாக கண்டித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
இந்தியாவில் புகையிலை பொருட்கள் எச்சரிக்கை படம் இல்லாமல் விற்பனை செய்ய மே 31ம் தேதி தான் கடைசி நாள். ஆனால், இன்று வரை பெரும்பாலான இடங்களில் இது அமல்படுத்தவில்லை.
புகையிலை தொடர்பான நோய்களால் ஒவ்வொரு நாளும் சுமார் 2 ஆயிரத்து 550 பேர் பலியாகி வருகின்றனர். புகையிலை பொருட்களில் எச்சரிக்கை படம் வரைவது அப்பொருட்களை பயன்படுத்துவதை குறைக்க வெகுவாக உதவும். இந்த திட்டத்தை உலக சுகாதார இயக்கமும் ஆதரித்து வருகிறது. இந்த முறை தற்போது 30 நாடுகளில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த எச்சரிக்கை படங்கள் அந்த பொருட்களை உட்கொள்பவர்களின் மனதில் ஒருவித பயத்தை உண்டாக்கி அவர்களது புகையிலை பழக்கத்தை நிறுத்துகிறது என ஒரு ஆராய்ச்சி தெரிவித்துள்ளது.
இவையெல்லாம் தெரிந்திருந்தும் மத்திய, மாநில அரசுகள் இதை நடைமுறைக்கு கொண்டு வருவதில் மெத்தனம் காட்டுகிறது. மத்திய அரசு, உச்ச நீதிமன்றத்துக்கு மே 31ம் தேதிக்குள் இது அமல்படுத்தப்படும் என வாக்குறுதிகள் கொடுத்திருந்தது. ஆனால், தற்போது மத்திய அரசு அந்த வாக்குறுதியை காற்றில் பறக்கவிட்டுள்ளது.
இது ஏற்கனவே பல தடைகளை சந்தித்துள்ளது. கடைசியாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் புகையிலை நிறுவனத்தினர் கூடுதல் அவகாசம் கேட்டனர். தற்போது அவகாசம் முடிந்த போதிலும் அதை நாடு முழுவதும் முழுமையாக நடைமுறைப்படுத்த தவறி வருகின்றனர் என்றார் அன்புமணி.












Click it and Unblock the Notifications