ஆதரவாளருக்கு ஜாமீன் தருமாறு நீதிபதி்க்கு மிரட்டலாக உத்தரவிட்ட மத்திய அமைச்சர்
சென்னை: போலி மதிப்பெண் பட்டியலை மருத்துவக் கல்லூரியில் தாக்கல் செய்தது தொடர்பான வழக்கில் சம்பந்தப்பட்ட மாணவருக்கும், அவரது தந்தைக்கும் ஜாமீன் வழங்க வேண்டும் என்று கூறி மத்திய அமைச்சர் ஒருவர் தனக்கு மிரட்டல் விடுத்ததாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ரகுபதி கூறியதால் இன்று உயர்நீதிமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் 3ம் ஆண்டு எம்.பி.பி.எஸ் படிப்பு படித்து வருபவர் கிருபா ஸ்ரீதர். இவரது தந்தை டாக்டர் கிருஷ்ணமூர்த்தி.
கடந்த இரு வருடங்களாக தேர்வில் தொடர்ந்து தோல்வியுற்று வந்துள்ளார் ஸ்ரீதர். இந்த நிலையில் அவரும் அவரது தந்தையும் சேர்ந்து, ஒவ்வொரு பாடத்திலும் கூடுதல் மார்க் வாங்குவதற்காக விடைத்தாள்களை மாற்றி பெரும் பிராடுத்தனம் செய்துள்ளனர்.
இது கண்டுபிடிக்கப்பட்டு வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து ஸ்ரீதரும், அவரது தந்தையும் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனர்.
இந்த நிலையில் நேற்று இந்த வழக்கு நீதிபதி ரகுபதி முன்னிலையி்ல விசாரணைக்கு வந்தது. அப்போது தனது கட்சிக்காரர்களுக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்குவதில் தாமதம் செய்வதாகவும், அரசுத் தரப்பே ஆட்சேபனை இல்லை என்று கூறியுள்ளதாகவும் அவர்களது வக்கீல் தெரிவித்தார்.
இதையடுத்து குறுக்கிட்ட நீதிபதி ரகுபதி, உங்களது கட்சிக்காரர்கள் என்னை தொடர்பு கொண்டு மிரட்டும் வகையில் பேசினர். ஜாமீன் கொடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.
இது முறையற்றது. அந்த மத்திய அமைச்சர் யார் என்பதை இப்போது நான் தெரிவிக்க விரும்பவில்லை.
இதுகுறித்து மத்திய அரசு உடனடியாக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால் இந்த விவகாரம் குறித்து உச்சநீதிமன்றத்திற்கும், மத்திய அரசுக்கும் நான் கடிதம் எழுத நேரிடும் என்றார் ரகுபதி.
நீதிபதியின் இந்த பகிரங்க புகாரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும், இந்த விவகாரம் குறித்து தலைமை நீதிபதி எச்.எல். கோகலேவுக்கு விரிவான கடிதம் ஒன்றை அனுப்பிய நீதிபதி ரகுபதி, இந்த வழக்கை வேறு பெஞ்சுக்கு மாற்றுமாறும் கோரியுள்ளார்.
தலைமை நீதிபதி கண்டிப்பு..
இதற்கிடையே, இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், நிலுவையில் உள்ள வழக்குகளில் மத்திய அமைச்சர்கள் தலையிடுவதைத் தவிர்க்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
யார் அந்த அமைச்சர்?
இதற்கிடையே உயர்நீதிமன்ற நீதிபதியையே மிரட்டிய அந்த மத்திய அமைச்சர் யார் என்ற பரபரப்பு எழுந்துள்ளது.