அதிமுக ஆட்சியில் வேட்டி கட்ட முடியாத நிலை!
சென்னை: அதிமுக ஆட்சியில் நான், பரிதி இளம்வழுதி போன்றவர்கள் சட்டசபைக்கு வேஷ்டி கட்டி வந்தால் பிரச்சனை வரும் என்று கருதி பேண்ட் அணிந்து வர வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்ட நிலை இருந்தது என்று காங்கிரஸ் எம்எல்ஏ பீட்டர் அல்போன்ஸ் கூறினார்.
சட்டசபையில் இன்று கூச்சல் செய்து குழப்பம் விளைவித்த அதிமுக உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்ட பின்னர் நடந்த விவாதம்:
சுதர்சனம் (காங்கிரஸ்): அவையில் இதுபோன்று கோஷமிடுவது அவையின் கண்ணியத்துக்கு எதிரானது. என்ன பிரச்சனை என்று சொல்லாமலே கோஷமிடுகிறார்கள். இனி இதுபோல் நடைபெறாமல் தடுக்க அலுவல் ஆய்வுக்குழு கூடி முடிவெடுக்க வேண்டும்.
இதற்கு கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
சபாநாயகர்: சட்டமன்ற விதிப்படிதான் நான் நடந்து கொள்கிறேன். நான் அனுமதித்தால்தான் பேச முடியும். என்னவென்றே சொல்லாமல் அதிமுக உறுப்பினர்கள் கோஷம் போடுகிறார்கள்.
பாலபாரதி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்): அதிமுக ஆட்சியின்போதும் இது போன்ற பிரச்சினைகள் நடந்து இருக்கின்றன. காங்கிரஸ் அதை விமர்சனம் செய்வது தவறு.
அமைச்சர் பொன்முடி: கடந்த ஆட்சி காலத்தில் எங்களை வெளியே தூக்கி போட்டு இருக்கிறார்கள். இப்போது அவை மரபை மீறி கோஷம் போட்டதால் வெளியேற்றப்பட்டு இருக்கிறார்கள்.
பீட்டர் அல்போன்ஸ் (காங்கிரஸ்): பாலபாரதி இங்கு பேசும்போது காங்கிரசுக்கு இதுபற்றி பேச என்ன உரிமை இருக்கிறது என்றார். சபையை கண்ணியமாக நடத்த வேண்டும் என்று கேட்க எங்களுக்கு உரிமை இருக்கிறது. அதிமுக ஆட்சி நடந்தபோது நாங்கள் எல்லாம் பேச எழுந்து நின்றாலே எந்த விதியின் கீழ் எழுந்து நிற்கிறீர்கள் என்று கேட்பார்கள்.
நான், பரிதி இளம்வழுதி போன்றவர்கள் வேஷ்டி கட்டி வந்தால் பிரச்சனை வரும் என்று கருதி பேண்ட் அணிந்து வந்த காலம் உண்டு.
இப்போது அதிமுகவினர் வெளியே திட்டமிட்டு கோஷங்களை எழுதிக்கொண்டு வந்து அவையில் அதை வாசித்து கோஷங்களை எழுப்புகிறார்கள். அவை விதிக்கு உட்பட்டு செயல்பட வேண்டும் என்று நாங்கள் சொல்கிறோம்.
இதையடுத்து காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் இடையே காரசார வாக்குவாதம் ஏற்பட்டது.
அமைச்சர் அன்பழகன்: எந்த ஒரு பிரச்சினை பற்றியும் சபாநாயகர் எடுப்பதுதான் முடிவு. அது தவறாக இருந்தாலும் அவை மரபுக்கு உட்படும்போது ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும். ஒரு தீர்மானத்தை கொண்டு வரும்போது அதை ஏற்கவும் மறுக்கவும் சபாநாயகருக்கு உரிமை உண்டு. சபாநாயகர் முடிவை ஏற்பதுதான் ஜனநாயகம்.
ஜி.கே. மணி (பாமக): அவை மரபுகள் எல்லாவற்றையும் நாங்கள் ஏற்கிறோம். மதிக்கிறோம். ஆனால் ஒரு முக்கியமான பிரச்சனை பற்றி பேச அனுமதி கேட்டால் சபாநாயகர் அனுமதி கொடுக்க மறுக்கிறார்.
அமைச்சர் அன்பழகன்: பேச அனுமதிக்கலாமா வேண்டாமா என்ற உரிமை சபாநாயகருக்கு இருக்கிறது.
சபாநாயகர்: அதிமுக, பாமக, கம்யூனிஸ்டுகள் கொடுத்த முக்கிய பிரச்சனை தான் இன்று விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. வேறு எதுவும் பேச அனுமதிக்கவில்லை.
இதையடுத்து தான் சொன்ன பிரச்சனை பற்றி பேச அனுமதிக்காததால் வெளிநடப்பு செய்வதாகக் கூறி பாமகவினருடன் மணி வெளிநடப்பு செய்தார்.