மதுரை சாப்ட்வேர் பூங்கா அமைக்கும் பணிகள் ஆரம்பம்
இந்தப் பணியை தமிழக அரசின் எல்காட் நிறுவனம் மேற்கொண்டுள்ளது. எல்காட் நிர்வாக இயக்குநர் டாக்டர் சந்தோஷ்பாபு இன்று மதுரை வந்து பணிகளை ஆய்வு செய்தார். அவருடன் மதுரை மாவட்ட கலெக்டர் மதிவாணனும் உடன் சென்றார்.
பின்னர் நிருபர்களிடம் பேசிய சந்தோஷ்பாபு,
தமிழகத்தில் சென்னையை தவிர 9 இடங்களில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்க இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. மதுரையில் இலந்தைகுளத்தில் 28 ஏக்கர் பரப்பளவிலும், வடபழஞ்சியில் 245 ஏக்கர் பரப்பளவிலும் இந்த தொழில் நுட்ப பூங்காக்கள் அமையும்.
இதற்கான கட்டமைப்பு வசதிகள் செய்வதற்கு ரூ.7.44 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதியைக் கொண்டு சாலை வசதி, சுற்றுச்சுவர், கேபிள் பதிக்கும் பணி போன்ற அடிப்படைப் பணிகள் செய்யப்படும். வரும் செப்டம்பரில் இந்தப் பணிகள் முடிவடையும்.
இது ஒரு சிறப்பு பொருளாதார மண்டலமாக அமையும். இங்கு எச்.சி.எல், ஹனிவெல் போன்ற நிறுவனங்களுக்கு 90 ஆண்டு குத்தகை அடிப்படையில் இடம் வழங்கப்பட்டுள்ளது.
செப்டம்பருக்குப் பின் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் கட்டடப் பணிகளை தொடங்கும். இலந்தைக்குளத்தில் ரூ.14 கோடியில் எல்காட் நிறுவனத்தின் அலுவலகம் அமைய உள்ளது. இதில் 500 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் கிடைக்கும் என்றார்.