போலீசுக்கு 'குடிமகன்கள்' அடி-உதை!-காத்த மக்கள்!!
சிவகங்கை: சிவகங்கை அருகே குடிகாரர்களிடம் சிக்கி கொண்ட போலீசாரை பொது மக்கள் காப்பாற்றிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ளது சேவுகப் பெருமாள் கோயில். இந்த கோயில் மண்டபத்தில் மதுரை சேக்கிப்பட்டியை சேர்ந்த சிலர் ஆடு வெட்டி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
அப்போது அவர்களில் சிலர் நன்றாக குடித்துவிட்டு அப்பகுதியில் உள்ள பெண்கள் பள்ளி உள்ள அருகே நின்று தங்களுக்கு ஆபாசமாக பேசி தகராறு செய்து கொண்டிருந்தனர்.
இந்த சமயத்தில் அந்த பக்காமக வந்த போலீஸ்காரர் குணசேகர் என்பவர் அந்த குடிகாரர்களை கண்டித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த கும்பல் அவரை தாக்கியது.
இதையடுத்து அங்கிருந்து ஓடிய அந்த போலீஸ்காரர், இன்ஸ்பெக்டருக்கு தகவல் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் சீராளன் மற்றும் இரண்டு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று போதையில் இருந்தவர்களை விசாரித்தனர். அப்போது அவர்கள் இன்ஸ்பெக்டரையும் அவருடன் போலீசாரையும் தாக்கினர். இதில் இன்ஸ்பெக்டரின் சட்டை கிழிந்தது.
இந்த சம்பவத்தை பார்த்து கொண்டிருந்த பொது மக்கள் ஓடி வந்து போலீசாரை காப்பாற்றினர். சேக்கிப்பட்டியை சேர்ந்த சேவுகமூர்த்தி, மணி, முருகன், பாண்டி, ராஜேந்திரன் உள்ளிட்ட ஒன்பது பேரை மடக்கிப் பிடித்தனர். அவர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொது மக்களை காக்க வேண்டிய போலீசை, பொது மக்கள் காப்பாற்றிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.