தமிழகத்தில் 25 லட்சம் போலி ரேசன் கார்டுகள்!
சென்னை: தமிழகத்தில் 30 மாவட்டங்களில் 25 லட்சம் போலி ரேசன் கார்டுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக உணவுத்துறை அமைச்சர் வேலு கூறினார்.
சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின்போது அவர் அளித்த பதில்:
ரேசன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. ரேசன் கடைகளுக்கு ஒவ்வொரு மாதமும் முதல் கட்டமாக 60 சதவீத அரிசியும், 2வது கட்டமாக 40 சதவீத அரிசியும் வழங்கப்படுகிறது.
முதலில் 10 கிலோ அரிசியும், அடுத்த கட்டமாக 10 கிலோ அரிசியும் பொது மக்களுக்கு வழங்கப்படுகிறது. சிலர் முதலில் 10 கிலோ கொடுத்துவிட்டு 2வதாக வரும் அரிசியை ரேசன் ஊழியர்கள் கடத்துவதற்கு தந்துவிடுவதாக புகார் வந்தது. இதையடுத்து நடத்தப்பட்ட சோதனையில் தவறு செய்த 29 விற்பனையாளர்கள் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அதன் பிறகு இது போன்ற குற்றங்கள் குறைந்துள்ளன.
கோவை, கன்னியாகுமரி, நெல்லை போன்ற பிற மாநில எல்லைப் பகுதிகளில் அரிசி கடத்தலை தடுக்க போலீசார் ரோந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு மட்டும் அரிசி கடத்தல் தொடர்பாக 4,060 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 135 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
முன்பெல்லாம் அரிசி பறிமுதல் செய்தல், டிரைவர்- கிளீனர் மீது வழக்கு போன்ற நடைமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டன. ஆனால் தற்போது லாரிகளின் பெர்மிட் ரத்து செய்வது, டிரைவர்களின் லைசென்சை ரத்து செய்வது போன்ற கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.
அரிசி எங்கிருந்து கடத்தப்பட்டது என்பதை அறிந்து அதற்கு காரணமானவர்கள் கைது செய்யப்படுகிறார்கள். அரிசி கடத்தலில் ஈடுபட்ட 371 லாரிகளின் பெர்மிட்டை ரத்து செய்யவும், 208 டிரைவர்களின் லைசென்சை ரத்து செய்யவும் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.
சட்டமன்ற உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், பொது மக்களின் பிரதிநிதிகள் ரேசன் கடைகளில் நேரடியாக ஆய்வு செய்யலாம். கட்டுப்பாட்டு அறையில் புகார் செய்யலாம். அதன் பிறகும் நடவடிக்கை இல்லையெனில் என்னிடம் தெரிவித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
30 மாவட்டங்களில் 25 லட்சம் போலி ரேசன் கார்டுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக கோவை, திருச்சி, சென்னை அண்ணாநகர் ஆகிய பகுதிகளில் தணிக்கை நடைபெற்று வருகிறது என்றார்.