2 வயது குழந்தை மீது ஆசிட் வீசிய கொடூர தந்தை
ஹைதராபாத்: ஆந்திராவில் 2 வயது குழந்தை மீது அந்த குழந்தையின் தந்தையே ஆசிட் வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் திக்காரெட்டிபள்ளி என்ற கிராமம் உள்ளது. இங்கு இல்லா புலிய்யா என்ற ஆட்டோ டிரைவர் வசித்து வருகிறார். இவருக்கு பார்வதி என்ற பெண்ணுக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்னதாக திருமணம் நடந்தது. இவர்களுக்கு மீனாட்சி என்ற இரண்டு வயது பெண் குழந்தையும் உள்ளது.
இந்நிலையில் கணவர் தினமும் குடித்துவிட்டு வந்த சித்ரவதை செய்ததால் பார்வதி தனது குழந்தையுடன் ஓராண்டுக்கு முன்னதாக தாய்வீட்டுக்கு சென்றுவிட்டார்.
இதையடுத்து ஆத்திரமடைந்த புலிய்யா, எப்படியாவது மனைவியை கொல்ல வேண்டும் என திட்டமிட்டார். இந்நிலையி்ல நேற்று மனைவியும், குழந்தையும் வீ்ட்டில் தனியாக படுத்திருப்பதை பார்த்த அவர், அவர்கள் இருவர் மீது ஆசிட் வீசினார்.
இதில் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. அவர்கள் நர்சராவ்பேட்டை மருத்துவமனையில் சிகிக்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக குண்டூர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர். அவர்கள் இன்னும் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.
இதையடுத்து போலீசார் புலிய்யாவை கைது செய்தனர்.
கல்லூரி மாணவி மீது ஆசிட்...
மற்றொரு சம்பவத்தில் ஹைதராபாத்தில் உள்ள எல்பி நகரில் வசித்து வருபவர் லாவண்யா. இவர் அப்பகுதியில் உள்ள பாலிடெக்னிக்கில் மூன்றாவது ஆண்டு படித்து வருகிறார். அவருடன் அவரது உறவினர் சுதாகர் நாயக் என்பவரும் படித்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று காலை 8 மணிக்கு லாவண்யா கல்லூரியில் உள்ள கம்ப்யூட்டர் லேப்புக்கு சென்றார். அப்போது அங்கு வந்த சுதாகர் நாயக் அந்த பெண்ணின் கழுத்தை நெறித்து கொலை செய்ய முயற்சித்துள்ளார். இதை பார்த்த மற்ற மாணவிகள், சக மாணவர்களை உதவிக்கு அழைத்துள்ளனர்.
அதே நேரத்தில் லாவண்யாவும், சுதாகர் நாயக் பிடியில் இருந்து தப்பிக்க முயன்றுள்ளார். இதையடுத்து ஆத்திரமடைந்த சுதாகர் நாயக் தன் கையில் வைத்திருந்த ஆசிடை எடுத்து லாவண்யாவின் முகத்தில் வீசினார். பின்னர் அவரை தொடர்ந்து தாக்கியுள்ளார்.
இதில் பலத்த காயமடைந்த லாவண்யா உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வருகிறார். அவரை சுற்றிவளைத்த மாணவர்கள் அவருக்கு தர்ம அடி கொடுத்து, அவரை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். காதல் விவகாரம் தொடர்பாக அந்த பெண் மீது ஆசிட் வீசப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications