கிழக்கு மாகாண முஸ்லீம் ஆயுதக் குழுக்கள் சரணடைய கெடு
கொழும்பு: விடுதலைப் புலிகளுக்கு எதிராக போராட உருவான முஸ்லீம் ஆயுதக் குழுக்கள் தங்களிடம் உள்ள ஆயுதங்களை ஒப்படைக்க விதிக்கப்பட்ட கெடுவை மேலும் நீடித்துள்ளது இலங்கை காவல்துறை. அதேபோல பொது மன்னிப்பு காலத்தையும் அது நீடித்துள்ளது.
இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் முஸ்லீம்கள் கணிசமான அளவில் உள்ளனர். ஆனால் இந்தப் பகுதியை விடுதலைப் புலிகள் தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்தபோது முஸ்லீம்கள் பெரும் அடக்கு முறைகளுக்கு ஆளானதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் கருணா குரூப் புலிகளிடமிருந்து விலகி தனியாக வந்த பின்னர் அந்த குருப்பின் ஆதரவுடன் புலிகளை ஒடுக்கி கிழக்கு மாகாணத்திலிருந்து விரட்டியது இலங்கை ராணுவம்.
இந்தச் சூழ்நிலையில் கிழக்கு மாகாணத்தில் பல்வேறு முஸ்லீம் குழுக்கள் உருவாகி அவர்கள் ஆயுதங்களுடன் புலிகளுக்கு எதிராக நடவடிக்கையில் இறங்கினர். இவர்களுக்கு அரசு மறைமுகமாக ஆதரவு தந்து வந்தது.
இந்த நிலையில் தற்போது இலங்கையில் போர் முடிவடைந்ததைத் தொடர்ந்து முஸ்லீம் குழுவினரைக் குறி வைத்து இலங்கை அரசு திரும்பியுள்ளது.
முஸ்லீம் குழுக்கள் தங்களிடம் உள்ள ஆயுதங்களை அரசிடம் ஒப்படைக்க வேண்டும். ஆயுதங்களை வைத்திருப்பது சட்டவிரோதமானது என்று காவல்துறை உத்தரவிட்டது.
ஆனால் முஸ்லீம் குழுக்கள் ஆயுதங்களை இன்னும் ஒப்படைக்கவில்லை. ஆயுதங்களை ஒப்படைத்தால் பொது மன்னிப்பு வழங்கப்படும் என்று அவர்களுக்கு காவல்துறை அறிவுறுத்தியது.
இந்த நிலையில் பொது மன்னிப்பு காலத்தையும் சரணடையும் காலத்தையும் நீட்டித்துள்ளது காவல்துறை.
இதுகுறித்து காவல்துறை டிஐஜி எடிசன் கூனதிலகே கூறுகையில், சனிக்கிழை பிற்பகல் 3 மணிக்குள் அனைவரும் ஆயுதங்களை ஒப்படைத்து விட்டு பொது மன்னிப்பைப் பெறலாம்.
மொத்தம் 18 குழுக்களிடம் ஆயுதங்கள் உள்ளன. மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் இந்தக் குழுக்கள் செயல்படுகின்றன. இவை சட்டவிரோதமாகும் என்றார்.
ஆனால் புலிகள் மீண்டும் தாக்கக் கூடும் என்பதால்தான் சுய பாதுகாப்புக்காக ஆயுதங்கள் வைத்திருக்கிறோம் என்று முஸ்லீம் குழுக்கள் கூறி வருகின்றன. இதனால் குழப்பம் அதிகரித்துள்ளது.












Click it and Unblock the Notifications