தந்தையின் ஓய்வூதியத்தை தடுத்து நிறுத்திய மகள்
சென்னை: சென்னை அருகே குடும்ப செலவுக்கு பணம் தர மறுத்த தந்தையின் ஓய்வூதியத்தை மகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நிறுத்தி வைத்தார்.
தாம்பரம் அருகே சிட்லபாக்கத்தை சேர்ந்தவர் காதர் ஷெரீப். தென்னக ரயில்வேயின் கேட்டரிங் துறையில் வேலை பார்த்த அவர் சமீபத்தில் ஓய்வு பெற்றார். அவருக்கு கமருன்னிசா என்ற மனைவியும், கவுசியா என்ற பெண்ணும் இருக்கின்றனர். இதில் கவுசியா சற்று மனவளர்ச்சி குன்றியவர்.
இந்நிலையில் சமீபகாலமாக காதர் ஷெரீப், வேறொரு பெண்ணுடன் ஊர் சுற்றி வருவதாகவும், குடும்பத்தை சரிவர கவனிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில் அவரது மகள் கவுசியா நேற்று சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில்,
எனது தந்தை காதர் ஷெரீப், தாயார் கமருன்னிசாவை விட்டு பிரிந்து விட்டார். அவர் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு வைத்துள்ளார். எங்கள் குடும்பத்தை கவனிக்கவில்லை. நான் மனவளர்ச்சி குன்றிய நிலையில் இருப்பதால் யாருடைய உதவியும் இல்லாமல் எங்களால் வாழ முடியாது.
என் தந்தை குடும்ப செலவுக்காக மாதம் ரூ. 500 கொடுத்து வருகிறார். இது எங்களுக்கு போதுமானதாக இல்லை. எனவே எனது தந்தைக்கு வழங்கப்படும் ஓய்வூதியத்தை அவருக்கு முழுமையாக கொடுக்க கூடாது.
அதில் அவரது வாரிசான எனக்கும், எனது தாய்க்கும் உரிய பங்கை அவர் கொடுக்க வேண்டும் என கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அவரது ஒய்வூதிய பலன்களை நிறுத்தி வைக்க உத்தரவிட்டார்.